பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை, தாய்ப்பால் தந்த தாயார் கண்ணயர்ந்தபோது, எதிர்பாராமல் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று மரண விசாரணை நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று பிறந்த குழந்தை நூர் இல்ஷான் இம்ரான். குழந்தையின் தாயார் செப்டம்பர் 1 அன்று பின்னிரவு 1.30 மணியளவில் தம் பக்கத்தில் படுக்க வைத்தவாறு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அசதியில் தூங்கிய தாயார், அதிகாலை மூன்று மணியளவில் கண்விழித்தபோது குழந்தை அசைவின்றிக் கிடந்ததாகவும் குழந்தையின் உடலைச் சுற்றியிருந்த துணியில் வாந்தியும் ரத்தக் கறையும் இருந்ததாகவும் கூறப்பட்டது.
உடனே செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, காலை ஐந்து மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்.
பிரேத பரிசோதனையில் எவ்வித உள்காயமோ வெளிக்காயமோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தாயார் தூங்கும்போது குழந்தை மூச்சுத் திணறி இறந்திருக்கக் கூடும் என்று தடயவியல் நிபுணர் பெலிண்டா லீ நீதிமன்றத்தில் கூறினார்.
தாயாரும் குழந்தையும் ஒரே கட்டிலில் உறங்கும்போது, குழந்தையின் மூக்கும் வாயும் தலையணையாலும் போர்வையாலும் மூடப்பட்டு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படலாம். இதனால் சுவாசிப்பது தடைப் பட்டு இறப்பும் ஏற்படலாம்.
இந்தச் சம்பவத்தில் சூது இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் குழந்தையின் இறப்பு, எதிர்பாராத சூழலில் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் கூறினார்.
இதன் அடிப்படையில் காரணம் உறுதிப்படுத்தப்படாத மரணம் என்று அவர் தீர்ப்பளித்தார்.