பாதுகாவல் அதிகாரியைத் திட்டிய எயிட் ரிவர்சுவீட்ஸ் கொன்டோமினிய குடியிருப்பாளர் அவரிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டுள்ளார்.
புதன்கிழமை இடம்பெற்ற ஒரு மணி நேர சந்திப்பில் குடியிருப்பாளார் திரு இராமல்லி ரமேஷ் “பலமுறை மன்னிப்புக்கேட்டார். மூத்த பாதுகாவல் மேற்பார்வையாளர் திரு ஸ்டீவன் ஹெங்கைத் திட்டியதை நினைத்து அவர் மிகவும் வருந்தியதாக பாதுகாப்புத் துறை சங்கத்தின் தலைவர் கூறினார்.
திரு ரமேஷுக்கு, திரு ஹெங்கை நன்கு தெரியும் என்றும் அவரை ரமேஷ் எப்போதும் ‘அங்கிள் ஸ்டீவன்’ என்றுதான் அழைப்பார் என்றும் பதிவு செய்யப்பட்ட பாதுகாவல் முகவைகள் சங்கத்தின் கௌரவ செயலாளர் திரு கேரி ஹாரிஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
திரு ஹெங்கை தொழிற்துறைச் சங்கத் தலைவர்கள் புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் திரு ரமேஷைச் சந்திக்கச் சென்றனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.
சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டதாக தமது ஃபேஸ்புக் பதிவில் ஹாரிஸ் குறிப்பிட்டார்.
தீபாவளி வாரயிறுதியில் தனது விருந்தினர்கள் திரு ரமேஷ் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். அப்போது, பாதுகாவலர் திரு ஹெங் விருந்தினர்கள் இரவு முழுவதும் காரை நிறுத்திவைக்க $10 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்ததால் பிரச்சினை வெடித்தது. அப்போது குடியிருப்பாளர் தகாத வார்த்தைகளால் திரு ஹெங்கைத் திட்டினார். அந்த நிலையில் திரு ஹெங், அமைதியைக் கடைப்பிடித்து தான் தனது கடமையைச் செய்வதாக் கூறினார்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளம்பியது.
திரு ரமேஷ் திட்டியதைக் காட்டும் காணொளி இணையவாசிகளுக்கு இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது பணிபுரியும் ஜே.பி. மோர்கன் அவரை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற இணைய மனு தொடங்கப்பட்டிருந்தது.
வெளிநாட்டவர்களையும் வெளிநாட்டுத் திறனாளர்களையும் பற்றிய விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் கிளப்பியது.
அவர் சிங்கப்பூரரைத் திருமணம் செய்து அதன் மூலம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து திரு ரமேஷ், திரு ஹெங் இருவரும் போலிசில் தனித்தனியே புகார் செய்தனர். 44 வயது ரமேஷ் மீது செய்யப்பட்டுள்ள புகார் குறித்து போலிஸ் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சு கூறியது.
தங்கள் பணியை மேற்கொண்டிருக்கும் பாதுகாவலர்களை தூற்றுவதை போலிஸ் கடுமையாகக் கருதுகிறது என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
குடியிருப்பின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொன்டோமினிய நிர்வாக முகவர்களும் நிர்வாகக் குழுவும் அதிகம் செய்ய வேண்டும் என்று திரு ஹாரிஸ் கூறினார்.
திரு ஹெங் தன்மையான, நல்ல பாதுகாப்பு மேற்பார்வையாளர் என்பது திரு ரமேஷ் உணர்ந்துள்ளார். எந்த வகையிலும் திரு ஹெங்கை காயப்படுத்தவோ வேதனைப்படுத்தவோ அவர் நினைக்கவில்லை. இரவு நேரம் முழுவதும் காரை நிறுத்த $10 கட்டணம் வசூலிக்கும் விதிமுறைதான் அவரைக் கோபப்படுத்தியது என்றும் திரு ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
திரு ஹெங், திரு ரமேஷை மனப்பூர்வமாக மன்னித்து, நடந்ததை மன்னித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது குணம் இதுவல்ல என்று திரு ரமேஷ் கூறியதாக சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கத்தின் தலைவர் திரு ராஜ் ஜோஷுவா தாமஸ் கூறினார். புதன்கிழமை நடந்த சந்திப்பில் கலந்துகொண்ட திரு ராஜ், அவர் கூறியதை தான் நம்புவதாகச் சொன்னார்.