பத்தாண்டுகளுக்கு முன்னர் ஈழப் போரை வழிநடத்தி, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையின் 7வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான 70 வயது கோத்தபய சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 1,300,000க்கும் அதிகமாக 6,924,255 (52.25%) வாக்குகளைப் பெற்றார். கோத்தபய திங்கட்கிழமை (நவம்பர் 18) அனுராதபுரத்தில் அதிபராகப் பதவி ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் போட்டியாகத் திகழ்ந்த புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கோத்தபய, இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாகக் கூறினார்.
மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்துள்ள சஜித் பிரேமதாச, தேர்தல் தோல்விக்கான பொறுப்பை ஏற்று கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அமைச்சுப் பதவியையும் கட்சியில் வகிக்கும் பதவிகளையும் ராஜினாமா செய்தார். பிரதமர் ரணில், நிதியமைச்சர் மங்கள, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உட்பட்ட அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியொன்றிலிருந்து ஒருவர் அதிபராகத் தேர்வுபெற்றிருக்கிறார். இலங்கையின் சக்திமிக்க குடும்பத்தில் பிறந்த கோத்தபய, முன்னாள் அதிபர் மகிந்தவின் தம்பி. முன்னாள் சபாநாயகர் சமல், முன்னாள் அமைச்சர் பசில் ஆகியோர் உட்பட இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர்.
கடந்த 1971ல் ராணுவத்தில் சேர்ந்த கோத்தபய, 1983 முதல் 1990 வரை விடுதலைப் புலிகளுடனான போரை முன்னின்று நடத்தினார். 1992ல் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அவர் அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். இலங்கை, அமெரிக்கா ஆகிய இரட்டை குடியுரிமைகளைப் பெற்றிருந்த கோத்தபய, அதிபர் தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையைத் துறந்துள்ளார்.
2005ல் மகிந்த அதிபரானதும் இலங்கைக்கு வந்த கோத்தபய தற்காப்பு அமைச்சராகப் பதவியேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து 2009ல் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியதற்காக ஒரு புறம் கொண்டாடப்பட்டாலும், போரின்போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இவர் மீது புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து குற்றங்களையும் மறுத்துள்ளார் கோத்தபய.