மனைவியைக் கொலை செய்துவிட்டு அவர் திடீரென மாயமானதாக நாடகமாடிய கணவரை புதுக்கோட்டை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஆலங்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்ற அந்த ஆடவர், தனது நண்பர்களின் துணையோடு மனைவியைக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் ரமேஷ். இத்தம்பதியர்க்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென மாயமானார் சரண்யா. இது குறித்து ஆலங்குடி போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி போலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், ரமேஷ் தனது நண்பர்களின் உதவியோடு சரண்யாவைக் கொலை செய்து காட்டுப் பகுதியில் புதைத்தது அம்பலமானது. இதையடுத்து போலிசார் ரமேஷுடன் அந்தப் பகுதிக்குச் சென்று தோண்டியதில், ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.
அதன் அருகே காணப்பட்ட உடைகளை போலிசார் சேகரித்துள்ளனர். உரிய மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே இறந்தது சரண்யா தானா என்பதை உறுதி செய்ய முடியும் என்றும், கொலை நிரூபிக்கப்பட்டால் ரமேஷின் நண்பர்களும் கைது செய்யப்படுவர் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மாயமான தங்கள் மகள் சரண்யா கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் அவரது பெற்றோரும் உறவினர்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
#புதுக்கோட்டை