காக்கி புக்கிட்டில் உள்ள லியோ தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்றும் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் குறைவு என்று கணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வேலை பார்க்க வேண்டாம், திரும்பிச் செல்லுங்கள் என்று நேற்றுக் காலை காக்கி புக்கிட் தங்குவிடுதியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் அவர்களின் முதலாளிகள் தெரிவித்தனர்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அந்த விடுதியில் தங்கியிருந்தார். அவர் மூலம் இதர ஊழியர்களுக்கும் கிருமி தொற்றி விடலாம் என்ற அச்சத்தில் முதலாளிகள் அந்த ஊழியர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
‘தி லியோ’ என்ற விடுதியைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலையிடங்களுக்குச் சென்றபோது அவர்கள் மீண்டும் விடுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் அப்படிச் செய்யத் தேவையில்லை என்று மனிதவள அமைச்சு நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர் பெரும்பாலும் அவரது அறையிலேயே இருந்தார் என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 19 பேர் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்று மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் குத்தகைதாரர்கள் சங்கத்திடம் நேற்று தெரிவித்தது.
வேலையிடங்களில் இருந்து திருப்பிவிடப்பட்ட ஊழியர்கள் பலரும் காக்கி புக்கிட் விடுதியில் வந்து இறங்கியதை நேற்றுக் காலை காணமுடிந்தது. அவர்களில் பலரும் முகக்கவசங்கள் அணிந்திருந்தனர். பலரும் மளிகை சாமான் பைகளுடன் காணப்பட்டனர்.
விடுதியின் பொது இடங்களில் துப்புரவாளர்கள் கிருமிநாசினிகளை அடித்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்து கொண்டு இருந்ததைக் காண முடிந்தது.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 39 வயது பங்ளாதேஷ் ஊழியர் இப்போது தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த நபர் பிப்ரவரி 7ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் லிட்டில் இந்தியாவில் இருக்கும் முஸ்தபா சென்டருக்குச் சென்றிருந்தார்.
“இந்தச் செய்தி பற்றி இன்று காலைதான் எங்களுக்குத் தெரிய வந்தது. எங்களில் சிலருக்கு கிருமித் தொற்றிவிடுமோ என்று பயமாக உள்ளது,” என்றார் அதே விடுதியில் தங்கியுள்ள பங்ளாதேஷ் நாட்டவரான 31 வயது உட்டின்.
இதனிடையே, சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா கிருமி பற்றி ஊழியர்களுக்குத் தெரியும் என்றும் ஆனால் அந்தக் கிருமி சீன ஊழியர்களைத்தான் தொற்றும் என்று பலர் நினைத்ததாகவும் முத்து பழனிவேல், 31, என்ற துரப்பண இயந்திரத்தை இயக்கும் ஊழியர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் அந்தக் கிருமி இப்போது பங்ளாதேஷ் ஊழியரைப் பிடித்துவிட்டது. இது பலருக்கும் பயத்தைக் கிளப்பிவிட்டு இருக்கிறது என்று இந்தியாவைச் சேர்ந்த அந்த ஊழியர் தெரிவித்தார்.
இவ்வேளையில், கிருமியால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர் அவர் வேலை பார்க்கும் இடத்திலும் தங்கியிருந்தார் என்றும் ஆனால் எவ்வளவு நாட்களாகத் தங்கியிருந்தார் என்பது தெரியவில்லை என்றும் தி லியோ விடுதியை நடத்தும் நிறுவனம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர் தங்கியிருந்த தி லியோ விடுதி மூடப்பட்டு இருக்கிறது. அது சுத்தப்படுத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.
இதுவரை அந்த பங்ளாதேஷ் ஊழியருடன் அறையில் தங்கியிருந்த 10 பேரைத் தனிமைப்படுத்த சுகாதார அமைச்சு ஆணை பிரப்பித்துள்ளது. தங்கும் விடுதியில் மற்ற ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயம் குறைவாக உள்ளது என அமைச்சு கணித்துள்ளது.
காக்கி புக்கிட் விடுதியில் சுமார் 4,100 ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா, பங்ளாதேஷ், சீனா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள். அங்கு 365 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 12 ஊழியர்கள் தங்கமுடியும். ஒவ்வொரு அறையிலும் தனித்தனி சமையல், கழிவறை வசதிகள் இருக்கின்றன.
காக்கி புக்கிட் தி லியோ விடுதியின் உரிமையாளரான எம்இஎஸ் குழுமம் தன்னால் ஆன அனைத்தையும் செய்து அதிகாரிகளுக்கு உதவி வருவதாக அதன் நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜலீல் தெரிவித்துள்ளார்.
கோவன் பாட்ஸ் ஸ்கூல்ஹவுஸ் வெறிச்சோடியது
கோவனில் உள்ள பாட்ஸ் ஸ்கூல்ஹவுஸ் பாலர்பள்ளி நேற்று ஏறக்குறைய வெறிச்சோடி இருந்தது. அதேவேளையில், அந்தப் பள்ளிக்கு 50 மீட்டர் தொலைவில் இருக்கும் மாடர்ன் மோண்டிசோரி பாலர்பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது.
கோவன் பள்ளிக்கு நேற்றுக் காலை நேரத்தில் ஒரே ஒரு பிள்ளை மட்டும் வகுப்புக்கு வந்ததைப் பார்க்க முடிந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
தன்னுடைய பேரப்பிள்ளையை அழைத்து வருவதற்காக 71 வயது முதியவர் ஒருவர் கோவன் பாலர்பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்த முதியவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது பிப்ரவரி 8ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
நேற்று கோவன் பள்ளியில் தங்கள் குழந்தையைக் கொண்டு வந்துவிட்ட தம்பதியர் தங்களுக்கு அந்தப் பள்ளியில் வகுப்புகள் நடக்காது என்பது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை என்று கூறினார்கள்.
இதனிடையே, அந்தப் பள்ளிக்கு அருகே இருக்கும் மாடர்ன் மோண்டிசோரி பாலர்பள்ளியில் நேற்றுக் காலை சுமார் 20 நிமிட நேரத்தில் பெற்றோர் ஏறக்குறைய 10 பிள்ளைகளைக் கொண்டு வந்துவிட்டதைப் பார்க்க முடிந்தது.
கொரோனா கிருமி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதியவர், பாய லேபார் மெத்தடிஸ்ட் தேவாலயத்திற்கும் சென்றிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து தேவாலயம் தன்னுடைய பாலர்பள்ளியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் மூடிவிடும் என்று பாதிரியார் சோங் சின் சுங் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.
கோவன் பாட்ஸ் பள்ளியும் மாடர்ன் மோண்டிசோரியும் தேவாலயமும் அனைத்துவகை துப்புரவு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
43வது சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள 54 வயது சிங்கப்பூர் ஆடவர் செங்காங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 26ஆம் தேதி மலேசியாவுக்குச் சென்று வந்துள்ளார்.
பிப்ரவரி 9 நண்பகல் நேரப்படி, இதுவரை கிருமி தொற்றியுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என்று மொத்தம் 989 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 892 பேர் சிங்கப்பூரில் உள்ளனர், 845 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 47 பேரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.