தனக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்ய முயன்றவரை, மாமியார் மற்றும் நாத்தனாரோடு சென்று முதல் மனைவி அடித்து, உதைத்த சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர் ரஃபிக். இவர் தனது திருமண வரவேற்புக்காக தயாராகிக்கொண்டிருந்தார்.
அப்போது மதிஹா என்ற பெண் தன் உறவினர்களுடன் வேக வேகமாகத் திருமண மண்டபத்திற்குள் நுழைத்து மணமகனை அடித்து உதைத்தார். அவருடன் வந்த உறவினர்களும் மணமகனை அடித்தனர்.
பின்னர் மண்டபத்திலிருந்த மற்றவர்கள் மதிஹாவையும் அவரது உறவினர்களையும் விசாரித்தபோது ரஃபிக்கின் முதல் மனைவிதான் மதிஹா என்றும் அவர் மதிஹாவை திருமணம் செய்துவிட்டு அவருக்குத் தெரியாமல் ஏற்கெனவே ஜீரா என்ற பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், ரஃபிக்கின் மூன்றாவது திருமணம் குறித்து அவரது இரண்டாவது மனைவி ஜீராதான், முதல் மனைவிக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, தன் உறவினர்கள் மற்றும் மகனோடு மண்டபத்திற்குச் சென்று திருமணத்தை மதிஹா தடுத்து நிறுத்தினார்.
பாகிஸ்தானில் நான்கு திருமணங்கள் வரை செய்து கொள்வது சட்டபூர்வமானது என்றாலும் அதற்கு ஒரு ஆடவரின் மற்ற மனைவிகளின் ஒப்புதல் அளிப்பது அவசியம்.
முதல் மனைவியின் ஒப்புதலைப் பெறாததால், சிக்கலில் மாட்டிக்கொண்ட ரஃபிக்கை போலிசார் கைது செய்தனர்.
மேலும, ரஃபிக்கை அடித்தது தவறு என மதிஹா, அவரது உறவினர்கள் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.