சீனாவில் கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; தொடர்ந்து குறையும் புதிய சம்பவங்கள்
சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 19) 2,000ஐ தாண்டியுள்ளது.
வூஹானில் கடுமையான தடைகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
சீனா தற்போது 1,749 புதிய கிருமித்தொற்று சம்பவங்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 27ஆம் தேதியிலிருந்து பார்த்தால் இது ஆகக் குறைவான எண்ணிக்கை.
ஆக அண்மைய நிலவரப்படி, சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000ஐ கடந்துள்ளது; கிருமித்தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,004. இதில் முக்கால்வாசி சம்பவங்கள் வூஹானில் நிகழ்ந்தவை.
ஹுபெய் வட்டாரத்தில் காய்ச்சல் கண்டவர்களை அடையாளம் காண்பதில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதன் மூலம் கிருமித்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 20 முதல் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற்றவர்கள், மருந்தகங்களிலும் இணையம் வழியாகவும் காய்ச்சல், இருமல் போன்றவற்றுக்கு மருந்து வாங்கியவர்கள் போன்றோர் கண்காணிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
ஹுபெய் தவிர சீனாவின் மற்ற பகுதிகளில் கிருமித்தொற்று தொடர்ந்து 15வது நாளாகக் குறைந்துள்ளது. இம்மாதம் மூன்றாம் தேதி ஹுபெய் தவிர சீனாவின் மற்ற பகுதிகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 890; ஆனால், நேற்றைய நிலவரப்படி 56 பேர் மட்டுமே புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#தமிழ்முரசு #கொரோனா #சீனா