கொரோனா கிருமி பரவும் சூழ்நிலையில் நிலைமை அடிக்கடி மாறுவதால் அதற்கு ஏற்ப உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது என்று கிருமிக்கு எதிராகப் போராடி வரும் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அனைத்து நேரங்களிலும் உயிர்களைக் காப்பாற்றுவதே கடுமையான முடிவுகளுக்கு காரணம் என்றார் அவர்.
“பொது சுகாதாரத்தின் கண்ணோட்டத்தில்தான் முடிவுகள் அமைகின்றன. அதற்குத்தான் நானும் முன்னுரிமை வழங்கி வருகிறேன்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அமைச்சர் வோங் சொன்னார்.
“நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் உயிர்களைக் காப்பாற்ற சரியான, அவசியமானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது. பொருளியல் பாதிக்கப்படும் என்பதால் உயிர்களைக் காக்கும் நடவடிக்கைகளை கைவிட முடியாது,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் மிதமானது முதல் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தி வருவதாகக் கூறிய திரு வோங், எல்லைகளுக்கு இடையே கட்டுப்பாடுகள், வெளிநாடு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தல், ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பான இடைவெளி போன்ற கடுமையான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 பிரச்சினை நீண்டகாலத்திற்கு நீடிக்கும் என்பதால் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். வழக்கநிலைக்குத் திரும்ப சில காலம் ஆகலாம். இந்த நேரத்தில் மக்கள் தங்களுடைய பங்கை ஆற்றினால் கடுமையான நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்த உதவும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் மூத்த சுகாதாரச் செய்தியாளர் சல்மா காலித்துக்கு சிறப்பு பேட்டியளித்தபோது அமைச்சர் லாரன்ஸ் வோங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சூழ்நிலை மேம்படுவதை பொறுத்து முழுமையாக அல்லாமல் ஓரளவு நடவடிக்கைகள் தளர்த்தப்படும். ஆனால் இன்னமும் கிருமி பரவல் சம்பவங்கள் அதிகரித்தால் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும். இதற்காக நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்,” என்று வெளியே செல்வதைக் குறைத்துக் கொண்டு வீட்டிலிருந்து பணியாற்றும் திரு வோங் சொன்னார்.
சிங்கப்பூரில் தற்போது 900 பேருக்கு மேல் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் 420 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமிக்கு மூன்று பேர் இறந்துவிட்டனர்.
சென்ற ஜனவரி மாதம் அமைச்சுகள்நிலை பணிக்குழுவுக்கு இணைத் தலைவராக பொறுப்பு ஏற்றத்திலிருந்து தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அமைச்சர், “ஒவ்வொரு நாளும் கிருமி பரவல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எந்த வகையில் கிருமி வெளிப்படும் என்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து புதிய நடவடிக்கைகளை உருவாக்குகிறோம். பின்னர் அந்த நடவடிக்கைகளை நிலைமைக்கு ஏற்ப சரி செய்கிறோம் என்றார்.
கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும் என்று அவர் கூறினார்.
பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தாவிட்டால் பொருளியலை பாதிக்காது என்பதல்ல. கிருமி பரவினால் மக்கள் வெளியே செல்வதையும் பயணம் செய்வதையும் நிறுத்திவிடுவார்கள். அப்போதும் பொருளியல் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதிவேகத்தில் திடீரென கிருமி கட்டுக் கடங்காமல் பரவிவிடுமோ என்பதே திரு வோங்கின் கவலையாகும்.
“அப்படி ஒருவேளை பரவினால் மரணங்கள் அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக எளிதில் கிருமி தொற்றக்கூடியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றார் அமைச்சர் வோங்.
#சிங்கப்பூர் #அமைச்சர் லாரன்ஸ் வோங் #நேர்காணல் #கொவிட்-19