பாதுகாப்பான இடைவெளியை நடைமுறைப்படுத்த, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கடுமையான விதிமுறைகள்
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க வெளிநாட்டு ஊழியர் விடுதிகளை நடத்துபவர்கள் கூடுதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களது புளோக் தவிர மற்ற புளோக்குகளுக்குச் செல்வதைத் தடுப்பது, குளியலறை மற்றும் சமையலறை போன்றவற்றை வெவ்வேறு நேரங்களில் பயன்படுத்துதல், பொழுதுபோக்கு அறைகள் மற்றும் மினிமார்ட்களில் ஒரே நேரத்தில் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்றவையும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
கடுமையான விதிமுறைகள் நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) மனிதவள அமைச்சால் வழங்கப்பட்ட ஆலோசனைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தன. அன்று இரவு அமைச்சு வெளியிட்ட கொவிட்-19 தரவுகளின்படி, சுங்கை காடுட்டில் அமைந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது. கிருமித்தொற்று குழுமமாக உறுதி செய்யப்பட்ட மூன்றாவது தங்கும் விடுதி அது.
சிலேத்தார் நார்த் லிங்கில் இருக்கும் S11 தங்கும் விடுதி, ஜூரோங் ஈஸ்டில் இருக்கும் வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் கிருமித்தொற்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
முஸ்தஃபா நிலையத்திலும், ஒரு கட்டுமானத் தளத்திலும் கெப்பல் கப்பல் பட்டறையிலும் கிருமித்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தங்கும் விடுதிகளுக்கு நேற்று அளிக்கப்பட்ட ஆலோசனைக் குறிப்புகள் உடனடியாக நடப்புக்கு வருவதுடன், இம்மாதம் 12ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும்.
தங்கும் விடுதியில் பாதிக்கப்பட்ட புளோக்குகளில் வசிப்போரின் சுகாதாரத்தை விடுதி நடத்துநர்கள் கண்காணிக்க வேண்டும். அந்த புளோக்குகளில் வசிக்கும் ஊழியர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதுடன், பொது இடங்களில் அவர்கள் பாதுகாப்பான இடைவெளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஊழியர்கள் அவர்களது அறைகளிலேயே இருப்பது, மற்றவர்களுடனான நேரடித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்வது ஆகியனவும் பின்பற்றப்பட வேண்டும்.
ஊழியர்கள் வெளி இடங்கள், நுழைவாயில்கள், உணவகங்கள் போன்ற இடங்களில் ஒவ்வொருவருக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் உணவையும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
இந்த பாதுகாப்பு நடைமுறைகள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளதாக வெஸ்ட்லைட் டோ குவான் தங்கும் விடுதியை நிர்வகிக்கும் சென்சுரியன் கார்பரேஷன், அங்கு வசிக்கும் 6,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்காணிக்கப்படுவர் என்றும் நிலைமை நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமை அங்கு முதல் நபருக்கு கிருமித்தொற்று இருப்படு உறுதி செய்யப்பட்டதும் அந்த நபரின் அறியில் தங்கியிருப்போர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோர் போன்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட புளோக்கிலும் பொதுவாக பலர் கூடும் இடங்களிலும் கிருமிநாசினி கொண்டு முழுமையாச் சுத்திகரிக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர் நிலையம் போன்றவற்றின் வழியாக ஊழியர்களுக்கு சரியான தகவல்களை வழங்கி வருகிறது மனிதவள அமைச்சு.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இந்த விடுதிகளில் சில இடங்களில் கூட்ட நெரிசல், காற்றோட்டமின்மை போன்ற சூழல்கள் நிலவுவதாகவும் அது கிருமித்தொற்று அபாஅத்தை அதிகரிக்கும் என்றும் TWC2 எனும் அரசுசாரா அமைப்பின் துணைத் தலைவர் அலெக்ஸ் ஆவ் தெரிவித்தார்.
“தங்கும் விடுதிகளில் படுக்கைகளுக்கு இடையிலான தூரத்தை அதிகரிப்பதையோ, புதிய தளங்களை எழுப்புவதையோ தங்கும் விடுதி நடத்துநர்கள் செய்துவிட முடியாது; அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் திருஆவ்.
#சிங்கப்பூர் #வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி