அமைச்சர்: சமூக அளவில் கிருமிப் பரவல் குறைந்தால் விதிகள் தளர்த்தப்படலாம்
கொரோனா கிருமித்தொற்று சமூக பரவல் எண்ணிக்கை குறைந்தால் வீடுகளிலிருந்து பலகாரங்கள் செய்யும் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தளர்த்தப்படலாம் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஏப்ரல் 27) மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“தற்போதைய விதிகளின்படி வீட்டு அடிப்படையிலான உணவு, பான தொழிலுக்கு அனுமதி இல்லை. ஆனால், சமூகப் பரவல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால், நாங்கள் சொன்னதுபோல், இத்தகைய தொழில்களுக்கான தடை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்,” என்று கொரோனா கிருமியை எதிர்த்துப் போராட அமைக்கப்பட்டுள்ள பல அமைச்சு நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் கூறினார்.
“எண்ணிக்கை குறைந்தால், சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம். அந்த நேரத்தில், அவற்றை எப்போது மீண்டும் தொடங்கலாம் என்று சிங்கப்பூரர்களுக்கு தெரியப்படுத்துவோம்,” என்றார் அமைச்சர் வோங்.
கிருமித்தொற்றை முறியடிக்க கடுமையாக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, வீடுகளிலிருந்து ‘பேக்’ செய்யும் தொழிலுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
உரிமையாளர் குடியிருப்பு இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது மூன்றாம் தரப்பு சேவைகள் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்ற நிலையில், வீட்டு அடிப்படையிலான தொழில், சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது. வாடிக்கையாளர்கள் தாங்களே சென்று பொருட்களைப் பெறுவதற்கும் அனுமதியில்லை.
(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)