வெளிநாட்டு ஊழியர்களிடத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனையை அதிகப்படுத்தி இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் இன்று (ஏப்ரல் 27) தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமி பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 21,000 வெளிநாட்டு ஊழியர்களை கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதாவது, தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களில் 15 பேரில் ஒருவருக்கு கிருமித்தொற்றுச் சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த விகிதத்தைக் குறைக்கவில்லை என்றும் திரு கான் விளக்கமாகக் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்களிடம் கிருமித்தொற்றுச் சோதனை மேற்கொள்வது குறைக்கப்பட்டுவிட்டதாகவும் அதனால்தான் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், வெளிநாட்டு ஊழியர் ஒருவரைக் கிருமி தொற்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அது சிங்கப்பூரின் பாதிப்புக் கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டினார்.
தங்கும் விடுதிகளில் கிருமி தொற்றும் விகிதம் மிகவும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு கான், அதற்கான அறிகுறிகள் தென்படும் ஊழியர்களை, உறுதிச் சோதனை செய்யப்படாவிடினும் அவர்களைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் சொன்னார்.
தேசிய அளவிலும் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் திறன் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இரு நாள்களுக்குமுன் நாளொன்றுக்கு 2,900 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிங்கப்பூர் இப்போது 8,000க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கிறது.
கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள முதியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தாதிமை இல்லப் பணியாளர்கள் போன்ற குறிப்பிட்ட குழுவினரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்க சிங்கப்பூர் ஆயத்தமாகி வரும் நிலையில், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டியது மிக முக்கியம் என்று இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)