சிங்கப்பூரில் புதிதாக 799 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (ஏப்ரல் 27) உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,423ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கிருமித்தொற்று கண்டவர்களில் 14 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களாவர்.
சுகாதார அமைச்சு இன்று இரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில் இதுகுறித்த மேல்விவரங்களைத் தெரிவிக்கும்.
சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 931 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக நேற்று அமைச்சு அறிவித்தது.
கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ச்சியாக குறைந்து வருவது உறுதிசெய்யப்படும் வரை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் 323,000 வெளிநாட்டு ஊழியர்களில் 11,419 பேருக்கு (சுமார் 3.5 விழுக்காடு) கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கூடுதலான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்று கண்ட வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு கடுமையான பாதிப்பில்லை. சமூகப் பராமரிப்பு வசதிகளில் அல்லது மருத்துவமனைகளின் பொதுப் பிரிவுகளில் அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.