பீஷான் எம்ஆர்டி நிலையத்தில் பணிபுரிந்த 58 வயது பெண்ணுக்கு நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக இன்று (மே 19) எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
வட்டப் பாதையில் அந்தப் பெண் சேவைத் தூதராகப் பணியாற்றி வந்தார். அவர் சென்று வந்திருக்கக்கூடும் என்று கருதப்படும் இடங்கள் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்பு தடமறிதலில் சுகாதார அமைச்சுக்கு உதவி வரும் எஸ்எம்ஆர்டி நிறுவனம், அந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு வேண்டிய ஆதரவையும் வழங்கியுள்ளது.
தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை அவர் பீஷான் நிலையத்தில் பணியில் இருந்தார்.
அவருக்கு கடந்த வியாழக்கிழமையே கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட அவர், எந்த கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர் என்பதைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு 50 வயது சிங்கப்பூரர் (ஆடவர்) எண் 1020 தாய் செங் அவென்யூவில் வேலைக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. அந்தக் கிருமித்தொற்று குழுமத்தில் 125 சம்பவங்கள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.