நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக, கிருமித்தொற்று நிபுணர்களை மேற்கோள் காட்டி டச்சு தேசிய ஒளிபரப்பு நிறுவனமான Nos தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக கிருமித்தொற்று கண்டுள்ள டச்சு நோயாளி வயதானவர் என்றும் அவருக்கு நோயெதிர்ப்புத் திறன் குறைவு என்றும் கிருமித்தொற்று நிபுணர் மரியான் கூப்மேன்ஸ் தெரிவித்ததாக அந்த ஊடகம் குறிப்பிட்டது.
டச்சு அரசாங்கத்துக்கு கிருமிப்பரவல் தொடர்பில் ஆலோசனை வழங்கக்கூடிய டாக்டர் கூப்மேன்ஸ், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படக்கூடும் என்றார். ஆனால், இத்தகைய சம்பவம் எவ்வளவு பேருக்கு நிகழும் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.
பெல்ஜியத்தில் மீண்டும் கிருமித்தொற்று கண்ட நபருக்கு மிதமான அறிகுறிகள் தென்பட்டதாகக் குறிப்பிட்ட அந்நாட்டு கிருமித்தொற்று நிபுணர் மார்க் வேன் ரேன்ஸ்ட், இது நல்ல செய்தியல்ல என்றார்.
முதல்முறை கிருமித்தொற்று ஏற்பட்டபோது நோயாளியின் உடலில் உருவான ஆன்டிபாடிகள், அந்தக் கிருமியின் மற்றொரு திரிபான கிருமியின் தொற்றைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்றார்.
ஹாங்காங்கில் ஒருவருக்கு இரண்டாவது முறையாக கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதையடுத்து இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.