“வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தம்முடைய மகள் பிரசன்னா தீக்சாவைத் தம்மிடம் ஒப்படைக்காவிடில் சுங்கை பட்டாணியில் இருந்து புத்ராஜெயா வரை 350 கி.மீ. ‘நீதி நடை’ மேற்கொள்வேன்,” என்று திருமதி எம் இந்திரா காந்தி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21ஆம் தேதி தொடங்கும் 12 நாள் நடைப் பயணத்தின் முடிவில் மாமன்னரிடமும் பிரதமரிடம் மனு அளிக்க திருமதி இந்திரா முடிவு செய்துள்ளார்.
“என் மகளை ஒப்படைத்து விடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள், அமைச்சர்கள் என எல்லா வழிகளிலும் போராடி ஓய்ந்துவிட்டேன்,” என்றார் திருமதி இந்திரா.
கே.பத்மநாதன் எனும் இவரின் முன்னாள் கணவர், இஸ்லாமில் இணைந்து முகம்மது ரிதுவானாக மாறினார். அத்துடன், தங்களின் மூன்று பிள்ளைகளையும் அவர் இஸ்லாமிற்கு மாற்றிவிட்டார்.
ஆயினும், 2018 ஜனவரியில் பெற்றோர் இருவரின் ஒப்புதலுடன் தான் சமயம் மாற்ற முடியும் என்பதால், பிள்ளைகளின் சமய மாற்றம் செல்லாததாகிவிட்டது.
ஆனால், அப்போது 11 மாதங்களேயான தீக்சாவை ரிதுவான் தம்முடன் எடுத்துச்சென்றுவிட்டார். அவருக்கு எதிராகக் கைதாணை இருந்தும் போலிசால் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடுவர்களின் மூலம் ரிதுவானிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரசன்னா தீக்சாவை மலேசியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலிஸ் உயரதிகாரி அப்துல் ஹமீது படோர் தெரிவித்தார்.