சிங்கப்பூர்-ஹாங்காங் இடையே சிறப்பு பயண ஒப்பந்தம் குறித்து சிங்கப்பூர் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் இரு நாடுகளுக்கிடையிலான விமானப் பயணச் சீட்டுக் கட்டணம் வெகுவாக அதிகரித்துவிட்டது.
ஹாங்காங் சென்று திரும்புவதற்கு இன்று (அக்டோபர் 16) காலை முதல் இவ்வாண்டு இறுதிவரையிலான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ‘எகானமி’ வகுப்பு பயணச்சீட்டுக்கான ஆகக் குறைந்த கட்டணம் $558 ஆனது.
ஆனால், நேற்று பிற்பகலில் இத்தகைய பயணத்துக்கான கட்டணம் $400 ஆக இருந்தது.
வர்த்தகப் பிரிவு விமானப் பயணக் கட்டணம் HK$5,000 லிருந்து HK$19,000 ஆக உயர்ந்தது.
கொவிட்-19 சூழலுக்கு முன்பு இவ்விரு நாடுகளிடையே, ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பயணங்கள் இருந்தன.
சிங்கப்பூரின் நேற்றைய அறிவிப்பைத் தொடர்ந்து, கேத்தே பசிஃபிக் விமான நிறுவனத்தின் பங்குகள் நேற்று 6.1 விழுக்காடும் இன்று 6.4 விழுக்காடும் உயர்ந்தன. இரு நாடுகளுக்கிடையிலான இந்தப் பயண ஒப்பந்தத்தின் மூலம் கேத்தே பசிஃபிக் நிறுவனத்தின் மாத வருமானம் HK$90 மில்லியன் வரை அதிகரிக்கக்கூடும்.
இன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகள் 1.4 விழுக்காடு உயர்ந்தன. இந்த நிறுவனத்தின் மாத வருமானம் $15 மில்லியன் வரை உயரும் என்று புளூம்பெர்க் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.