கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடி காரணமாக பொருளியல் சரிவு ஏற்பட்டு இருப்பதால் சிங்கப்பூரின் 85,000 அரசாங்க ஊழியர்களுக்கு நடப்பாண்டில் ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படாது என பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே அரையாண்டு போனசும் வழங்கப்படாத நிலையில் இவ்வாண்டில் வருடாந்திர மாறுவிகித சம்பளத்தொகையாக எதையும் அரசாங்க ஊழியர்கள் பெறமாட்டார்கள்.
அதே நேரத்தில், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் வழக்கம்போல 13வது மாத போனஸ் வழங்கப்படும்.
அத்துடன், இந்தச் சிரமமான வேளையில் குறைந்த வருமான அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கும் விதமாக, கிட்டத்தட்ட 2,400 பேருக்கு ஒருமுறை மட்டும் சிறப்புத்தொகையாக $1,200 வழங்கப்படும் என பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சிரமமான வேளையில் குறைந்த வருமான அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கும் விதமாக, கிட்டத்தட்ட 2,400 பேருக்கு ஒருமுறை மட்டும் சிறப்புத்தொகையாக $1,200 வழங்கப்படும் என பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 6% முதல் 6.5% வரை சுருங்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
மனிதவள அமைச்சின் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் ஒட்டுமொத்த, உள்ளூர்வாசிகள் மற்றும் சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதங்களும் அதிகரித்துள்ளன.
“இந்தச் சவால்மிக்க பொருளியல் சூழலில் சிங்கப்பூரர்களுடன் பொதுச் சேவைத் துறை இணைந்து நிற்கிறது. பொதுச் சேவைத் தொழிற்சங்கங்களுடன் அணுக்கமாக ஆலோசித்தபின், அரசாங்கப் பணியாளர்களுக்கு ஆண்டிறுதி வருடாந்திர மாறுவிகித சம்பளத்தொகை வழங்குவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று பொதுச் சேவைப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
“கொரோனா தொற்றுக்கு எதிரான தேசிய போராட்டத்தில், எங்களது பொதுச் சேவை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக களைப்பறியாது உழைத்தனர். பொதுச் சேவை அதிகாரிகள் அனைவரது கடின உழைப்பையும் அரசாங்கம் பெரிதும் மெச்சுகிறது.
“கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இவ்வேளையில், கிருமித்தொற்றையும் பொருளியலில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் எதிர்கொள்ள பொதுச் சேவைப் பிரிவினர் தொடர்ந்து கடினமாக உழைப்பர்; குடிமக்களுடனும் பங்காளிகளுடனும் கைகோத்துச் செயல்படுவர். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு, வலுவானவர்களாக உருவெடுப்போம்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்து இருக்கிறது.