கொவிட்-19 சூழலால் வழக்கம்போல பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலையில் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் இத்தகைய சூழலிலும் அவர்களுக்கு பொங்கல் கொண்டாட்ட உணர்வைப் பரப்பும் பொருட்டு, பொங்கோல் பகுதியில் அமைந்துள்ள எஸ்11 ஊழியர் தங்கு விடுதி நிர்வாகம், அங்கு வசிக்கும் ஏறத்தாழ 1,000 ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளன்று சிறப்பு உணவுப் பொட்டலங்களை வழங்கி மகிழ்வித்தது. சர்க்கரைப் பொங்கல், சாதம், சாம்பார் அடங்கிய உணவுப் பொட்டலங்கள் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
தங்குவிடுதியில் வசிப்பவர்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை எண்ணி தாம் பெருமிதம் கொள்வதாக கட்டுமானத் துறை ஊழியர் திரு மணிவேல் மாரிமுத்து, 40, கூறினார். கடந்த 18 ஆண்டுகளாக அவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
“எஸ்11 தங்குவிடுதியில் உள்ள திரையரங்கில் இவ்வாரம் இரண்டு திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தேன். விஜய்யின் ‘மாஸ்டர்’, சிம்பு வின் ‘ஈஸ்வரன்’ ஆகியவை அவை.
“கொவிட்-19 சூழலிலும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கும் அதேவேளையில், ஊழியர்களுக்கு இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. பொங்கல் தினத்தன்று ஊழியர்களுக்கு உணவளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது மற்றொரு சிறப்பு,” என்றார் திரு மணிவேல்.
இவ்வாண்டு நோய்த்தொற்று நிலவரம் முடிவுக்கு வந்து எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாக கட்டுமானத் துறை ஊழியர் திரு ராமன் சுந்தரம், 40, சொன்னார்.
“கடந்த சில ஆண்டுகளில் பொங்கல் அன்று சக ஊழியர்களுடன் சேர்ந்து கோயிலுக்குச் செல்வேன். தங்குவிடுதி அறையிலேயே பொங்கல் சமைத்து, கடவுளுக்குப் படையல் வைத்து, உணவை வெளியே எடுத்துச் சென்று சாப்பிடுவோம். எளிமையாக கொண்டாடினாலும் மனம் நிறைவாக இருக்கும். கோயிலுக்கு மறுபடியும் போக மனம் ஏங்குகிறது,” என்றார் அவர்.
கட்டுமானத் துறை ஊழியர் திரு ராமசாமி சுரேஷ், தமக்கு வாய்ப்பு கிடைத்தால் சொந்த ஊரான காரைக்குடிக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார்.
“சென்ற ஆண்டு மார்ச் மாதம் ஊருக்குச் சென்று வந்தேன். நான் ஊருக்குச் சென்றது அதுவே கடைசி. ஊரில் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடும் அனுபவம் வேறு. குடும்பத்தைக் காண மனம் ஏங்குகிறது. நோய்த்தொற்று நிலவரம் சரியாகியவுடன் நான் ஊருக்குச் செல்ல காத்து இருக்கிறேன். இதற்கிடையே, பொங்கல் அன்று எஸ்11 விடுதி எங்களுக்காக சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது,” என்றார் சுரேஷ்.
‘கைண்ட்ஸ் ஃபேமளி அசோசியேஷன்’ என்று அழைக்கப்படும் ஒரு சங்கம், ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியது. ஏறத்தாழ 200 குடும்பங்களைக் கொண்ட இந்தச் சங்கம் 10 ஆண்டுகளாக இயங்குகிறது. வழக்கமாக பொங்கலுக்கு அண்டை நாடுகளுக்குச் செல்வது அல்லது உள்ளூரிலேயே ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை நடத்தும் இந்த அமைப்பு இம்முறை சமூகத் தொண்டு ஆற்ற முடிவெடுத்துள்ளது என்றார் சங்கத்தின் தலைவர் திரு கலையரசு தொண்டைமான், 51.
“எங்களது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடி இவ்வாண்டு பொங்கல் அன்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தனர். அனைவரும் இந்த முயற்சிக்கு கைகொடுத்து வெற்றிகரமாக செயல்பட ஆதரவு அளித்தனர்,” என்றார் திரு கலையரசு.