தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (மே 10) சென்னையில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவியதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
அதிமுக செய்தித்தொடர்பாளர் சசிரேகாவும் இத்தகவலை உறுதி செய்ததாக தினமலர் நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.
அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.