வெளிநாட்டு ஊழியர் செலவு: நிறுவனங்களுக்கு உதவும் மசோதா நிறைவேற்றம்
கொவிட்-19 பரவல் காரணமாக புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன. இதனால் வெளிநாட்டு ஊழியர் செலவு கூடுகிறது. இந்த அதிகரிப்பைச் சம்பந்தப்பட்டவர்கள் சரிசமமாக பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய ஓர் ஏற்பாடு நடப்புக்கு வருகிறது.
அதன்படி இங்குள்ள கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்கு ஒரு மதிப்பீட்டாளரை நியமித்து ஒப்பந்தத் தொகையைச் சரிப்படுத்த உதவும்படி சம்பந்தப்பட்ட அமைப்பு களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் இன்று (மே 11) கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (திருத்தம் எண் 3) சட்ட மசோதா நிறைவேறியது. அதன் மூலம் குத்தகைதாரர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதோடு இதர நடவடிக்கைகளையும் கருத்தில்கொண்டு பார்க்கையில், மனிதவள நெருக்கடி காரணமாக கட்டுமானத் தொழில்துறை இப்போது எதிர்நோக்கும் கணிசமான சுமைகளைக் குறைக்க மேலும் உதவி கிடைக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று அதிகம் உள்ள நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இங்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மனிதவள செலவு கூடிவிட்டது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு மேலும் சுமையாகி இருக்கிறது.
கொவிட்-19 சென்ற ஆண்டு தலைகாட்டியது முதலே இந்தத் துறை பல காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று அமைச்சர் மன்றத்தில் விளக்கினார்.
புதிய குத்தகைகளுக்கான ஏலத் தொகை உயர்ந்து உள்ளது என்பது கட்டட, கட்டுமான ஆணையம் தலைமையிலான சிறப்பு பணிக்குழு மூலம் தெரியவந்துள்ளது. புதிய கட்டுமான குத்தகைகள் இடர்களையும் செலவுகளையும் நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.