சிங்கப்பூர், மேலும் பல நாடுகளின் சுற்றுப்பயணிகள் இங்கு வர அனுமதிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. போலந்து, சவூதி அரேபியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்னிலும் குறைவான நிபந்தனைகளுடன் சிங்கப்பூருக்கு வர இதன் மூலம் அனுமதி கிடைக்கும்.
என்றாலும் இங்கு தரையிறங்கிய பிறகு அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிமைக் காலம் முன்பைவிட குறைவான நாட்களாக இருக்கும். அல்லது விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தனிமையில் இருந்துகொள்ளலாம்.
கொவிட்-19 தொற்று நிலவரத்தின் அடிப்படையில் நாடுகளை சிங்கப்பூர் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது.
கொவிட்-19 தொற்று ஆபத்து குறைவாக இருக்கும் நாடுகள் முதல் பிரிவில் இருக்கின்றன. போலந்து, சவூதி அரேபியா நாடுகள் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆஸ்திரேலியா, புருணை, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்தப் பிரிவில் இருக்கின்றன.
இப்பிரிவில் உள்ள நாடுகளில் இருந்து புறப்படுவோர், 48 மணி நேரம் முன்னதாக பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். இங்கு தரையிறங்கும்போதும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
கடைசி நாளன்று மூக்கு திரவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்பன நிபந்தனைகள்.
பல்கேரியா, செக் குடியரசு, பிரான்ஸ், லாட்வியா, போர்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிரிவு 3ல் சேர்க்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இந்த நாடுகளைச் சேர்ந்த முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இங்கு செப்டம்பர் 22 இரவு 11.59 மணி முதல் 14 நாட்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஏதுவாக விண்ணப்பிக்கலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 14 நாட்கள் குறிப்பிட்ட இடத்தில் தனிமையில் இருக்கவேண்டும்.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் இந்தோனீசியாவுக்குச் சென்று வந்திருக்கும் அனைத்து பயணிகளும் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் சாங்கி விமான நிலையம் வழி இடைவழிப் பயணியாக வந்து செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் இங்கு தரையிறங்கும்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.