சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த புதிய மருந்து ஒன்று பயன்படுத்தப்பட இருக்கிறது.
அதற்கான விநியோக, கொள்முதல் ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது.
‘டெல்டா’ உட்பட உருமாறிய கொரோனா கிருமிக்கு எதிராக அந்த மருந்து வலுவாகச் செயல்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடாவில் உள்ள ‘எம்எஸ்டி’ என்று அழைக்கப்படும் ‘மெர்க்’ மருந்து தயாரிப்பு நிறுவனம், மையாமியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘ரிட்ஜ்பேக் பயோதெரபியுட்டிக்ஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து மாத்திரை வடிவிலான அந்த மருந்தை உருவாக்கியுள்ளன.
சிங்கப்பூர் அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியதும் புதிய மருந்து இங்கு கிடைக்கும் என்று எம்எஸ்டி தெரிவித்தது.
இதுகுறித்து கருத்து கேட்க சுகாதார அமைச்சுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
‘மோல்னுபிரவிர்’ எனும் அந்த மாத்திரை, கிருமி தன்னைத் தானே நகல் எடுத்துப் பெருக உதவும் குறிப்பிட்ட ‘என்ஸைம்’மை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.
‘காமா’, ‘டெல்டா’, ‘மியூ’ உள்ளிட்ட உருமாறிய கிருமிக்கு எதிராக ‘மோல்னுபிரவிர்’ செயல்திறன் உடையது எனக் கூறப்படுகிறது.
“கிருமித்தொற்றுப் பாதிப்பின் ஆரம்பக்கட்டத்தில் மருந்து ஆற்றலுடன் செயல்படும்,” என்று எம்எஸ்டி தெரிவித்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்படுவர்களின் மரணமடையும் சாத்தியத்தைப் பாதியாகக் குறைக்க வாய்ப்புள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சோதனை முடிவுகள் காட்டின.