ஏர்ஏஷியா, ஜெட்ஸ்டார் ஏஷியா, மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு நிறுவனங்களும் இம்மாதம் 29ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையே நாள்தோறும் ஆறு விமான சேவைகளை இயக்கவிருக்கின்றன.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று வியாழக்கிழமை இதனை அறிவித்தது.
சிங்கப்பூர்-மலேசியா தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்திற்கு (விடிஎல்) இம்மாதம் 22ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மறுதிறப்பு விமானப் பயணத்திற்கு மட்டுமே பொருந்தும்.
நீண்டகால அனுமதி அட்டை உடையோரும் குறுகியகால வருகையாளர்களும் ‘விடிஎல்’ திட்டம் மூலமாக சிங்கப்பூர் வருவதற்கு இம்மாதம் 22ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை.
பயணிகள் இருநாடுகளின் சுகாதார அமைப்புகளாலும் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டிருக்க வேண்டும். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காண்பிக்கத் தேவையில்லை.