சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவழி பயணம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கக்கூடும்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவழி பயணங்கள் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கக்கூடும். தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தைப் போன்ற ஓர் பயண ஏற்பாட்டின்கீழ் இது சாத்தியமாகும்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று திங்கட்கிழமை (நவம்பர் 15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், இதன் தொடர்பில் மலேசியாவுடனான பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
“இன்னும் ஒரு சில வாரங்களில் நிலவழி பயணங்களைத் தொடங்க நாங்கள் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் இடையே நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் தொடங்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது, விமானப் பயண ஏற்பாடாகும்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவழி பயணம் எப்போது தொடங்கும் என இருநாட்டு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கொவிட்-19க்கு முந்தைய சூழலில், உட்லண்ட்ஸ் கடற்பாலம் மற்றும் துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலம் வழியாக நாள்தோறும் ஏறத்தாழ 415,000 பேர் பயணம் செய்தனர்.