டர்பன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள இரு பெரிய நகராட்சிப் பகுதிகளில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை கழிவுநீர் ஆய்வு காட்டுவதாக தென்னாப்பிரிக்க மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்துள்ளது.
ஷுவான் மற்றும் நெல்சன் மண்டேலா பே ஆகிய இரு நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள கழிவுநீர் மாதிரியில் கிருமிக் கூறுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஷுவானில் 2.9 மில்லியன் பேரும் நெல்சன் மண்டேலா பேயில் 1.15 மில்லியனுக்கு மேற்பட்டோரும் வசிக்கின்றனர்.
‘ஓமிக்ரான்’ எனப்படும் புதுவகை கொரோனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க மருத்துவ ஆய்வு மன்றம் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.
‘ஓமிக்ரான்’ கிருமி மற்ற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்க, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்கள் வந்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுவகை கிருமி உருவெடுத்திருப்பது குறித்து கலந்தாலோசிக்க, தேசிய கொரோனா கிருமித்தொற்று தளபத்திய மன்றம் இன்று சனிக்கிழமை அவசரமாகக் கூடுகிறது.