ஃபிராங்ஃபர்ட்: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதுவகை கொரோனா கிருமி குறித்த கூடுதல் தகவலை இரு வாரங்களில் தான் எதிர்பார்ப்பதாக பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மூலம், ஃபைசர் நிறுவனத்துடன் சேர்ந்து தான் தயாரித்துள்ள தடுப்பூசியை மாற்றியமைக்க வேண்டுமா என்பதைத் தான் தீர்மானிக்க முடியும் என்று பயோஎன்டெக் நேற்று வெள்ளிக்கிழமை கூறியது.
தேவை ஏற்பட்டால், புதுவகை கிருமியை எதிர்கொள்ளத் தேவையான புதிய தடுப்பூசியைத் தயாரித்து, 100 நாள்களில் மற்ற நாடுகளுக்கு அதை விநியோகிக்க முடியும் என்று ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் நம்புகின்றன.
“புதுவகை கிருமி குறித்து எழுந்துள்ள கவலை எங்களுக்குப் புரிகிறது. அதன் தொடர்பில் விசாரணையை நாங்கள் உடனடியாக முடுக்கிவிட்டுள்ளோம்,” என்று பயோஎன்டெக் கூறியது.
இதற்கிடையே, மொடர்னா நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதுவகை கிருமியை எதிர்கொள்வதற்கான ‘பூஸ்டர்’ தடுப்பூசியை மேம்படுத்த தான் செயல்பட்டு வருவதாக அது தெரிவித்தது.
அதனுடன், கூடுதல் மருந்து சேர்க்கப்பட்டுள்ள பூஸ்டர் தடுப்பூசியையும் தான் பரிசோதித்து வருவதாகக் கூறிய மொடர்னா, மற்ற வகை பூஸ்டர் தடுப்பூசிகளையும் தான் ஆராய்ந்து வருவதாகச் சொன்னது.