வழக்கமான அனைத்துலக விமானப் பயணங்களைக் குறித்த தேதியில் இந்தியா தொடங்காது எனத் தெரிகிறது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதி அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டத்தை இந்திய அரசாங்கம் காலவரையின்றி தள்ளிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
'ஓமிக்ரான்' வகை கிருமியின் பரவலைச் சுட்டி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் இதைத் தெரிவித்தது.
கொவிட்-19 சூழல் காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா வழக்கமான அனைத்துலக விமானப் பயணங்களை நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கும் தேதியை "உரிய நேரத்தில்" அறிவிக்கப்போவதாக இயக்ககம் கூறியது.
அதுவரை, தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் 31 நாடுகளுடன் தான் செய்துகொண்டுள்ள விமானப் பயண ஏற்பாட்டை இந்தியா தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.