முன்னதாகவே பணம் செலுத்தி வாங்கப்படும் (ப்ரீபெய்டு) சிம் கார்டுகளை மோசடியான முறையில் பதிவு செய்ததன் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) இடம்பெற்ற ஊழல் தடுப்பு நடவடிக்கையின்போது ஒன்பது ஆடவர்கள், ஒரு பெண் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகள் ஆர்ச்சர்ட், கேலாங், சிராங்கூன், பாசிர் ரிஸ், ஜூரோங் வெஸ்ட், ஈசூன், உட்லண்ட்ஸ், பூன் லே, டெஸ்கர் ரோடு, சையது ஆல்வி ரோடு, ரோச்சோர் கேனல் ரோடு ஆகிய இடங்களில் செயல்படும் 17 கைபேசிக் கடைகளில் ஒன்பது மணி நேரம் சோதனை நடத்தினார்கள்.
அந்த 10 சந்தேக நபர்களும் 31 முதல் 56 வயது வரையுள்ளவர்கள். மேலும், 24 முதல் 68 வயது வரையுள்ள 15 ஆண்களும் ஒன்பது பெண்களும் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
அப்பாவிகளான வாடிக்கையாளர்கள் அல்லது வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மோசடியான முறையில் சிம் கார்டுகளை பதிந்து இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.