சிங்கப்பூரில் உள்ள பல முக்கிய வான்வெளித் துறை நிறுவனங்கள், இவ்வாண்டு கூடுதல் ஊழியர்களை வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளன.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்துத் துறை மீண்டும் படிப்படியாக மீண்டு வருவதை ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ் நாளிதழிடம் இந்த நிறுவனங்கள் சுட்டின.
தற்போது கூடுதல் விமானங்களை வானத்தில் பார்க்க முடிகிறது என்று அவை குறிப்பிட்டன.
விமானப் போக்குவரத்துத் துறையில் நீண்டகால வாய்ப்புகள் மீண்டும் மலர்வதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக வான்வெளித் துறை நிறுவனங்கள்
நம்பிக்கை தெரிவித்தன.
விமானப் போக்குவரத்துத் துறை மேம்பட்டால் அதனுடன் நெருங்கிய தொடர்புள்ள வான்வெளித் துறையும் பலனடையும்.
விமானங்களை உற்பத்தி செய்வது, அவற்றைப் பழுதுபார்ப்பது, பராமரிப்பது முதலியவை வான்வெளித் துறையின் பொறுப்பாகும்.
இவ்வாண்டு 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் அமர்த்தவிருப்பதாக ஜிஇ
விமானப் போக்குவரத்து இயந்
திரச் சேவைகள் சிங்கப்பூர் எனும் வான்வெளித் துறை நிறுவனம் தெரிவித்தது.
மின்னிலக்கம், இயந்திரவியல், உயர் தொழில்நுட்ப ஆய்வு, நீடித்த நிலைத்தன்மை முதலியவற்றில் அனுபவமுள்ள பொறியாளர்களும் தொழில்நுட்பர்களும் வேலைக்கு எடுக்கப்படுவர் என்று அந்நிறு
வனம் கூறியது.
அந்த நிறுவனத்தில் ஏற்
கெனவே 1,700 பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், நிபுணர்கள் பணிபுரிகின்றனர்.
வான்வெளித் துறையின் நிலை இவ்வாண்டு மேம்படும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு இயன் ரோஜர் கூறினார்.
பயணிகளுக்கு மீண்டும் சேவை வழங்கும் விமானங்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
3,000க்கும் மேற்பட்ட ஊழியர்
களைக் கொண்ட எஸ்டி எஞ்ஜி னியரிங்கின் வர்த்தக வான்
வெளிப் பிரிவு, இவ்வாண்டு மேலும் 200 பேரை வேலையில் அமர்த்த இருக்கிறது.
விமானத் தொழில்நுட்பர்கள், ஆய்வாளர்கள், தரவுப் பகுப்பாளர்கள் ஆகியோர் தேவைப்படுவதாக அந்நிறுவனம் கூறியது.
"விமானப் போக்குவரத்துத் துறை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பும்போது வான்வெளித் துறை நிறுவனம் என்கிற முறையில் அவற்றுக்குத் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம். இதன் காரணமாக மனிதவளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் கவனம் செலுத்துகிறோம்," என்று எஸ்டி எஞ்ஜினியரிங்கின் வர்த்தக வான்வெளிப் பிரிவின் தலைவர் திரு ஜெஃப்ரி லாம் தெரிவித்தார்.
ஏர்பஸ், போயிங், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற வான்வெளித் துறை நிறுவனங்களும் வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணிகளை முடுக்கிவிடத் திட்டம் வைத்
திருப்பதாகக் கூறின.
ஆண்டாண்டு காலமாக உலகளாவிய நிலையில் விமானப் பரா
மரிப்பு, பழுதுபார்ப்பு, இயந்திர மாற்றியமைத்தல் ஆகியவற்றில் சிங்கப்பூரின் பங்களிப்பு அதிகம் என்று பொருளியல் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.