சிங்கப்பூரில் தற்போதைய ஓமிக்ரான் பரவல் உச்சத்தைக் கடந்துவிட்டது. தொற்று எண்ணிக்கை இப்போது குறைந்துவருகிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 9) அன்று இதைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டின்போது அவர் பேசினார்.
ஓமிக்ரான் பரவல் குறைந்து வருவதாக அறிகுறிகள் தெரிகிறது என்றார் அவர்.
இதனால், சுகாதாரத் துறை ஊழியர்கள் இப்போதாவது தங்களுக்கு உரிய, நீடித்த ஓய்வைப் பெறுவார்கள் என்று திரு ஓங் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மார்ச் 8 நிலவரப்படி சுமார் 22,000 பேருக்கு கொவிட்-19 தொற்றியது. ஒப்புநோக்க, பிப்ரவரி 22ஆம் தேதி, அந்த எண்ணிக்கை 26,000 ஆக இருந்தது.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு உதவ தமது அமைச்சு தன்னால் முடிந்தவற்றைச் செய்து வந்துள்ளதாக திரு ஓங் கூறினார்.
அவர்களுக்கு பாதுகாப்புக் கவச ஆடைகள் இருப்பதை உறுதிசெய்தது, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட்டது, முடிந்தவரை அதிகமான நோயாளிகளை மருத்துவமனைகளை விட்டு வேறு சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றியது போன்றவை அவற்றில் அடங்கும்.
அதே நேரம் மருத்துவமனைகள், மருத்துவத் துறை ஊழியவர்களைத் தவிர்த்து தனியார் மருந்தகங்களும் ஓமிக்ரான் பரவலால் இன்னமும் சுமையை எதிர்நோக்குவதாக சுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களால் அந்த அழுத்தம் ஏற்படுவதாக அவர் கூறினார்.
முழுமையாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத பெரியவர்களில் 3 விழுக்காட்டினர், தீவிரச் சிகிச்சை தேவைப்படுவோர், மரணமடைந்தோர் எண்ணிக்கையில் 25 விழுக்காட்டுப் பங்கு வகிப்பதாக அவர் சொன்னார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இந்த பிரிவினரைப் பாதுகாக்கவே தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன என்றார் அவர்.
இதனால் நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்குவது தற்போது சரி இல்லை என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.