ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்றியோர் மீண்டும் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் தற்போது குறைவு என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முந்திய திரிபு தொற்றிய ஒருவருடன் ஒப்பிடுகையில், ஓமிக்ரான் தொற்றிய வேறொருவர் மீண்டும் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியமும் குறைவு என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர்கள் கூறினர்.
மறுதொற்று அபாயத்தைத் தீர்மானிப்பதில் நேரம் முக்கிய அம்சமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும், கடும் நோய் பாதிப்பு, மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் தடுப்பூசி இன்றியமையாததாக விளங்குவதாக நிபுணர்கள் கூறினர்.
பிஏ2 வகை ஓமிக்ரான் திரிபு ஒருவரை மீண்டும் தொற்றும் அபாயம் தற்போது மிகவும் குறைவு என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் சூ லி யாங் சொன்னார்.
“சிங்கப்பூரில் ஓமிக்ரான் திரிபு ஒரு சில மாதங்களாக மட்டுமே பரவி வருகிறது. எனவே, இங்கு ஒருவர் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியிருப்பார். ஆறு மாதங்களுக்குள் அவரை கொவிட்-19 மீண்டும் தொற்றும் அபாயம் மிகக் குறைவு,” என்று அவர் விளக்கினார்.
ஓராண்டுக்குள் அதே வகை ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகும் அபாயமும் மிகவும் குறைவும் என்று பேராசிரியர் சூ கூறினார். என்றாலும், இதை உறுதியாகச் சொல்வதற்கு தற்போது போதிய ஆதாரம் இல்லை என்றார் அவர்.
ஓமிக்ரான் தொற்றியோர் இரு மாதங்களுக்குள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் குறைவு என்பதை அண்மைய ஆய்வுகள் காட்டியுள்ளதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
என்றாலும், முன்பு வேறொரு வகை திரிபு தொற்றிய ஒருவர் இப்போது ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்பில் வரும்போது, அவரை மீண்டும் கிருமி தொற்றும் அபாயம் கூடுகிறது.