மக்கள் செயல் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாற்பட்ட காலத்திற்கும் உரிய சிங்கப்பூருக்கான வழிகாட்டித் திட்டத்தை விரைவில் உருவாக்குவார்கள் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
பொருளியல், சுகாதாரப் பராமரிப்பு, வீடு, கல்வி இதர துறைகள் பற்றிய தொழிற்சங்கம், மக்கள், தனியார் துறை ஆகிய பல்வேறு துறைகளையும் சேர்ந்தவர்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் திரட்டுவார்கள் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
டௌன்டவுன் ஈஸ்ட்டில் மே தினப் பேரணியில் தொழிற்சங்கவாதிகளிடம் நிதி அமைச்சர் நேற்று உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் நேரடியாக ஏறத்தாழ 900 பேர் கலந்துகொண்டனர். மெய்நிகர் ரீதியில் கிட்டத்தட்ட 1,000 பேர் பங்கேற்றனர். எவை எவற்றை வேறுபட்ட முறைகளில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது பற்றி தானும் நான்காம் தலைமுறைக் குழுவினரும் விவாதிக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
மக்களுக்காக அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் புதிய திட்டம் கொண்டிருக்காது. ஒருவர் மற்றொருவருக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் அந்தத் திட்டம் உள்ளடக்கி இருக்கும் என்றார் திரு வோங்.
"நாம் எல்லாரும் சேர்ந்து செயல்பட்டு நாம் தோள்கொடுக்கும் நன்னெறிகளுடன் கூடிய இன்னும் சிறந்த ஒரு சமூகத்தைச் சாதிக்க அந்தத் திட்டம் வழிவகை செய்யும்," என்றும் அவர் தெரிவித்தார்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் 'முன்னேறும் சிங்கப்பூர்' என்ற ஒரு திட்டத்தை உருவாக்குவதே நமது இலக்கு என்று அவர் கூறினார்.
அந்த இலக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாற்பட்ட காலத்திற்கும் உரிய வழிகாட்டித் திட்டத்தை உருவாக்கும் என்றார் அவர்.
அந்தத் திட்டம் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் மிக முக்கிய முயற்சியாக இருக்கும் என்று கூறிய அவர், திட்டம் விரைவில் முறைப்படி தொடங்கப்படும் என்றார். புதிய திட்டத்திற்குத் தொழிற்சங்க இயக்கத்தின் முழு ஈடுபாடும் ஆதரவும் தேவை என்று திரு வோங் வலியுறுத்தினார்.
தொழிலாளர் இயக்கமும் முத்தரப்பு உறவும் பல ஆண்டு காலமாக சிங்கப்பூர் வெற்றியின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வந்திருப்பதை அவர் சுட்டினார். முத்தரப்பு உறவின் முக்கியத்துவம் பற்றியும் தனது உரையில் திரு வோங் வலியுறுத்திக் கூறினார்.
"நான் என் பெற்றோரைவிட சிறந்த நிலையை எட்டினேன். அடுத்த தலைமுறையும் அதே போல மேம்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
"இதுவே நான்காம் தலைமுறைத் தலைவர்களின் விருப்பம். என் விருப்பமும் இதுதான்," என்று நிதி அமைச்சர் கூறினார்.
உள்ளூரிலும் உலகளவிலும் சவால்கள் இருக்கும் என்றாலும் கடந்த இரண்டாண்டுகளில் கிடைத்த அனுபவம் தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.