கொவிட்-19 காரணமாக 4.75 மி. பேர் மரணமா? இந்தியா சாடல்
இந்தியாவில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஏறத்தாழ 4.75 மில்லியன் பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் புதிதாக மதிப்பிட்டு இருக்கிறது.
ஆனால் இதை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இந்தியாவில் 2020-2021ல் கொவிட்-19 தொடர்பில் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 481,000 என்று புதுடெல்லி அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடு அந்த அதிகாரபூர்வ அளவைவிட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.
கொரோனா காரணமாக உலகளவில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் பதிவானவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.
இந்தியாவில் நிகழ்ந்த மரணங்கள் கொவிட்-19 தொற்று காரணமாக நேரடியாக ஏற்பட்டவையாக இருக்கலாம். அல்லது தொற்று காரணமாக சுகாதார முறையிலும் சமூகத்திலும் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக ஏற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த நிறுவனம் தன்னுடைய மதிப்பீட்டை வெளியிட்ட உடனேயே இந்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
உலக சுகாதார நிறுவனம் மரணங்களைக் கணக்கிடும் முறையை எப்போதுமே தான் எதிர்த்து வருவதாக இந்தியா தெரிவித்தது.
இந்தியாவின் அக்கறைகளை, கவலைகளை எல்லாம் போதிய அளவுக்குக் கவனத்தில் கொள்ளாமல் சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்களை வெளியிடுவதாக இந்தியாவின் சுகாதார, குடும்ப நல்வாழ்வு அமைச்சு குறிப்பிட்டது.
அனைவருக்கும் ஒரே மாதிரி என்ற அணுகுமுறை அல்லது முன்மாதிரி முறை இந்தியாவுக்குப் பொருந்தாது. இந்தியாவின் அளவும் அதன் பன்முகத்தன்மையும் 1.3 பில்லியன் மக்கள்தொகையும் இதற்குக் காரணம் என்று இந்திய அமைச்சு விளக்கியது.