மலேசியா அடுத்த ஜூன் மாதத்திலிருந்து கோழிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 3.6 மில்லியன் கோழிகள் மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஜூன் முதல் தேதி இது நடப்புக்கு வரும்.
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் கோழிகளின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலை சீராகும்வரை ஏற்றுமதி நிறுத்தப்படும்.
ஒருசில நிறுவனங்கள் கோழி விநியோகத்தையும் கோழி இறைச்சியின் விலையையும் கட்டுப்படுத்துவதாக மலேசியா அரசாங்கம் கூறுகிறது. இது குறித்து விசாரணை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ல் மலேசியாவிலிருந்து 49 மில்லியன் உயிர் கோழிகள், 42.3 டன் கோழி, வாத்து இறைச்சி ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
சிங்கப்பூர் சென்றாண்டு சுமார் 73,000 டன் கோழியை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தது. இங்கு உட்கொள்ளப்படும் கோழி இறைச்சியில் இது மூன்றில் ஒரு பங்காகும்.