ஆப்கானிஸ்தானில் இன்று(ஜூன் 22) அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 950 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாநிலத்தில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது என்றும் 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை ஆஃப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 119 மில்லியன் மக்கள் உணர்ந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த நில நடுக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், முல்தான், குவெட்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சில வினாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.