இந்தியாவில் முதன்முறையாக ஒரு ரயில் சேவையில் சைவ உணவு மட்டும் வழங்கப்படவுள்ளது.
டெல்லி முதல் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள காத்ராவுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் இந்த முறை தொடங்கப்படும்.
ரயிலில் முழுக்க முழுக்க சைவ உணவு மட்டும் பரிமாறப்படும். இறைச்சி, மீன் வகைகள், முட்டை ஆகியவை அதில் வழங்கப்படாது.
அது மட்டுமல்ல, அந்த ரயில் சேவைக்கான உணவு தயாரிக்கும் சமையலறையில் அசைவ உணவுக்கும் சமையல் பொருள்களுக்கும் இடம் இருக்காது.
ரயிலில் உணவைப் பரிமாறும் ஊழியர்களும் அசைவ உணவுகளைத் தொடாதவர்களாக இருப்பார்கள்.
வந்தே பாரத், சாத்வீக சான்றிதழ் பெறும் இந்தியாவின் முதல் ரயில் சேவையாக இருக்கும்.
இந்திய ரயில்வே துறையும் அரசாங்கம் சாராத அமைப்பான இந்திய சாத்வீக மன்றமும் அதற்கான உடன்பாட்டை செய்துகொண்டுள்ளன.
சமையல் முறை, சமையலறைகள், பாத்திரங்கள், உணவு வைத்திருக்கப்படும் முறை ஆகியவற்றை சோதித்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும் என்று இந்திய சாத்வீக மன்றம் கூறியது.
இன்னும் 18 ரயில்களில் சைவ உணவு முறையைக் கொண்டு வரத் திட்டமுள்ளதாக மன்றம் தெரிவித்தது.