கொவிட்-19 சூழலிலும் அல்ஜுனிட் குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சியிடமே வாக்காளர்கள் கட்சியிடமே வாக்காளர்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமைச் செயலாளர் 43 வயது பிரித்தம் சிங், சில்வியா லிம் (55) முகம்மது ஃபைஸல் அப்துல் மானாப் (45), ஜெரல்ட் கியாம் (42), லியோன் பெரேரா (49) ஆகியோர் அடங்கிய குழு கடந்த தேர்தலை அதிகமாக 85,603 (59.93%) வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் செயல் கட்சி (மசெக) 57,244 (40.07%) வாக்குகளைப் பெற்றது.
மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்ட 58 வயது விக்டர் லாய் தியன் தலைமையிலான குழுவில் அலெக்ஸ் இயோ (41), ஷாம்சுல் கமார் (48), சான் ஹுவி யு (44), சுவா எங் லியோங் (49) ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்தத் தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று அல்ஜுனிட்.
கடந்த சில வருடங்களாக நகர மன்ற நிர்வாகம் தொடர்பான புகார்களை பாட்டாளிக் கட்சி எதிர்நோக்கி வந்தது. அதுகுறித்த காரசாரமான விவாதங்கள் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் இடம்பெற்றன.
அத்துடன் நகர மன்ற நிர்வாகிகளுக்கு எதிராக சிவில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், 2015 தேர்தலில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் 50.95% விழுக்காடு வாக்குகளுடன்தான் பாட்டாளிக் கட்சி வெற்றி பெற்றது. இவற்றால் எல்லாம் அங்கு போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அத்துடன், கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளாலும் அதனால் நிலவும் கட்டுப்பாடுகளாலும் இந்தத் தேர்தல் சாதகமாக இருக்காது என்று பிரித்தம் சிங் உட்பட பல எதிர்க்கட்சியினும் குறைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தகைய சூழலிலும் அல்ஜுனிட் - ஹவ்காங் தொகுதிகளை பாட்டாளிக் கட்சி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
வரலாற்றில் குறிப்பிடத்தக்க தேர்தலான 2011ஆம் ஆண்டு தேர்தலில் அல்ஜுனிட் தொகுதியை பாட்டாளிக் கட்சி வென்றது. அத்தேர்தலில்தான் முதன்முதலாக ஒரு எதிர்க்கட்சி ஒரு குழுத் தொகுதியைக் கைப்பற்றியது. அவ்வாண்டு லோ தியோ கியாங் தலைமையிலான பாட்டாளிக் கட்சிக் குழு 54.72% வாக்குகளுடன் வென்று சாதனை படைத்தது.
இந்தத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 151,007.
குழுத்தொகுதி முறை அறிமுகமான 1988ஆம் ஆண்டில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அல்ஜுனிட் குழுத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரின் வடகிழக்கு, கிழக்கு பகுதிகளை கொண்ட இத்தொகுதியில் பாய லேபார், சிராங்கூன் கார்டன்ஸ், சிராங்கூன் நார்த்தின் தெற்குப் பகுதி, பிடோக்கின் ஒரு பகுதி, தெம்பனிசின் ஒரு பகுதி ஆகியவையும் அடங்கும். 2006, 2011, 2015 ஆகிய மூன்று பொதுத் தேர்தல்களை இத்தொகுதி சந்தித்தது. 2011ல் பாட்டாளிக் கட்சி வசம் இத்தொகுதி சென்றதால், நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியது.