ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய 33 வயது சிங்கப்பூரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது.
கடந்த 2018 நவம்பர் 20ஆம் தேதியன்று, ஷென் ஹன்ஜீ என்ற அந்த ஆடவரின் படுக்கையறையில் உள்ள ஓர் இழுப்பறைப் பெட்டியில், 25 பொட்டலங்களில் 34.94 கிராம் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் போதைமருந்துப் பொட்டலங்களில் கஞ்சா இருப்பதாகத் தான் நம்பியதாக ஷென் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருக்கு அதை வழங்கிய ‘ஆலன்’ என்பவர், ‘ஷாவ் டெ’ என்று சொன்னதைத் தான் கஞ்சா என்று புரிந்துகொண்டதாக ஷென் சொன்னார்.
அத்துடன், ஆலனுக்காகத் தான் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருந்தேன் என்றும் அவற்றைக் கடத்துவது தனது நோக்கமன்று என்றும் அவர் கூறியதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்தப் போதைமருந்துப் பொட்டலங்களை வைத்திருக்கும்படி ஆலன் தன்னை முதலில் கேட்டுக்கொண்டதாகவும் ஒரு மாதத்திற்குள் தன்னுடைய ஆள் வந்து அதனைப் பெற்றுக்கொள்வதாக அவர் சொன்னதாகவும் விசாரணையின்போது ஷென் நீதிமன்றத்தில் கூறினார்.
ஷென்னிடம் ஆலன் போதைப்பொருள்களைக் கொடுத்தது இது முதன்முறையன்று என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
கைதுசெய்யப்பட்டபோது, ஷென் வேலையின்றி இருந்தார். அத்துடன், அச்சமயத்தில் அவர் நாள்தோறும் ‘ஐஸ்’ போதைப்பொருளை உட்கொண்டார் என்றும் அவருக்குச் சூதாட்டப் பழக்கம் இருந்தது என்றும் கூறப்பட்டது.
கைதுசெய்யப்படுவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே தன் தந்தையின் காப்பிக்கடைக்குச் சென்று உதவுவதை அவர் நிறுத்திவிட்டார். தன் கைச்செலவிற்குப் பெற்றோரிடம் பணம் பெற்று வந்தார்.
அத்துடன், நிதி நெருக்கடி காரணமாக தன் பெற்றோரின் உடைமைகள் உட்பட பலவற்றை அவர் அடகு வைத்ததாகவும் சொல்லப்பட்டது.
ஷென்னுக்கு 2022ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்படது.
சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட முடியும்.