நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), தெமாசெக், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) ஆகியவற்றுக்கு இடையிலான $75 மில்லியன் மதிப்பிலான முன்னோடித் திட்டத்தின்கீழ் முதல் தொழில்நுட்பத் துணை நிறுவனமாக என்டியுவின் ஆம்பியர்சேண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
என்யுஎஸ் அடுத்த ஆண்டு ஆற்றல் மாற்றம், நுண்மின்னணுவியல் போன்ற துறைகளில் அத்தகைய நிறுவனங்களைத் தொடங்கும்.
தெமாசெக் ஆண்டுதோறும் நடத்தும் ‘ஆர்ஐஇ தொழிலக நாள்’ புதன்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டபோது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இதனை அறிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் எரிசக்திக் கட்டமைப்பு 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக ஆம்பியர்சேண்ட் இருந்து வருகிறது. அந்நிறுவனம், திண்மநிலை மின்மாற்றித் தொழில்நுட்பங்களை வணிகப்படுத்த இலக்கு கொண்டுள்ளது. என்டியு ஆய்வாளர்கள் பலர் உருவாக்கி, பெற்றுள்ள பல காப்புரிமைகளின் அடிப்படையில் அத்தொழில்நுட்பங்கள் அமைந்துள்ளன.
முதற்கட்டமாக, உலகிலேயே முதன்முறையாக, மின்சார வாகனங்களுக்கு பல மெகாவாட் கொண்டு விரைவாக மின்னூட்டம் செய்வதற்கான சிறப்பு திண்மநிலை மின்மாற்றித் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்துவதே ஆம்பியர்சேண்ட் நிறுவனத்தின் இலக்கு.
அனைத்துலக அளவில் அத்தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கருவிகளை 2025ல் வழங்க அது இலக்கு கொண்டுள்ளது.