கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் தற்போது குணமடைந்துள்ளார்.
திங்கட்கிழமை (மே 29) அவர் வழக்கம் போல் பணிக்குத் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் லீ மே 22ஆம் தேதி கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.
நோய்த்தொற்றால் முதல்முறையாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட பிறகு நாடு திரும்பிய போது அவருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.
71 வயதான பிரதமர் லீ மே 14, 15, 16ல் கேப்டவுனில் இருந்தார். அதன் பின்னர் மே 17, 18, 19 களில் நைரோபியில் இருந்தார். அதற்கு முன்னர் 42ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனீசியாவிற்கும் அவர் சென்றிருந்தார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி தாம் மருந்துகள் எடுத்துக்கொண்டதாகவும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் பிரதமர் லீ சமூக ஊடகங்கள் வழி தகவல் வெளியிட்டிருந்தார்.
பொதுமக்கள் கொவிட்-19க்கான கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் நினைவூட்டினார்.