சொங் பாங்கில் உள்ள மூத்த குடிமக்கள் தங்களின் மின்னிலக்கக் கல்வியறிவுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள பாடங்கள் பெற்றுக்கொண்டனர்.
அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் அதிகமானோர் தொடர்புகொள்ளவும், தகவல் தேடுவதற்கும், கட்டணம் செலுத்துவதற்கும் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சொங் பாங் சமூக மன்றத்தில் ‘ஷாப்பீ எம்பவர்ஸ்’ எனும் மூத்தோருக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு முதியவருக்கும் வழிகாட்டிப் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.
இணையத்தைப் பாதுகாப்புடன் பயன்படுத்த மூத்தோருக்கு உதவி தேவை என்று உள்துறை, சட்ட அமைச்சர் க. சண்முகம் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மின்னிலக்க உலகிலிருந்து அவர்களை விலக்குவது ஒரு தீர்வு அல்ல என்று நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சொங் பாங்கில் நடத்தப்பட்டதைப் போன்ற நிகழ்ச்சிகள், மின் வர்த்தகத் தளத்தைப் பயன்படுத்த மூத்தோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றார் அவர்.