பசுமைப் பொருளியல் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் சிங்கப்பூர் - இந்தோனீசியா இடையிலான ஒத்துழைப்பு தொடரும் நிலையில், இந்தோனீசியாவின் எதிர்காலத் தலைநகரான நுசந்தாராவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஜாவாவின் போகோர் அரண்மனையில் இடம்பெற்ற சிங்கப்பூர், இந்தோனீசியத் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பிற்குப் பிறகு சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசியபோது பிரதமர் லீ இவ்வாறு சொன்னார்.
இவ்வாண்டுப் பிற்பகுதியில் இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நுசந்தாராவிற்கு மாறவிருக்கிறது.
சிங்கப்பூர் அரசாங்கத்திற்குச் சொந்தமான எரிசக்தி மற்றும் நகர மேம்பாட்டு நிறுவனமான செம்ப்கார்ப், நுசந்தாராவிற்கு நீடித்த அளவிற்கு எரிசக்தி விநியோகம் திட்டத்தை வைத்துள்ளதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
“இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவின் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டம் இது. அதில் சிங்கப்பூர் பங்கேற்க முடிவது எனக்கும் மகிழ்ச்சி தருகிறது,” என்று அவர் சொன்னார்.
“சிங்கப்பூருக்கு இது மிக முக்கியமான உறவுமுறை. இந்தோனீசியாவும் தனது கண்ணோட்த்தில் இதனை மதிப்புமிக்க உறவாகவே கருதும் என நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.
பசுமைப் பொருளியலில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் மற்றக் கூட்டுத் திட்டங்கள் குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தோனீசியாவிலும், இந்தோனீசிய இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிங்கப்பூரிலும் பணியாற்ற வழி ஏற்படுத்தித் தரும் வகையில், ஒரு முன்னோடித் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
‘டெக் எக்ஸ்’ எனும் அத்திட்டம், சிங்கப்பூர் - இந்தோனீசியா தொழில்நுட்பச் சூழல் அமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளையும் சேர்ந்த இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலை அனுபவம் பெறவும் மின்னிலக்கப் பொருளியலில் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவும் அத்திட்டம் கைகொடுக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.