சீனாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூர்வாசிகள், நீண்ட காலம் தங்கும் அனுமதி பெற்றிருப்போருக்கு வீட்டிலேயே தங்கி இருக்கும் புதிய உத்தரவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறை நாளை இரவு 11.59 மணியிலிருந்து நடப்புக்கு வரும். கடந்த 14 நாட்களுக்குள் ஹுபெய் மாநிலத்துக்கு வெளியே சீனாவின் மற்றப் பகுதிகளுக்கு சென்று திரும்பும் அனைவருக்கும் இது பொருந்தும்.
தற்போது நடப்பிலுள்ள வேலை விடுப்பு திட்டத்தைவிட இது கடுமையானதாக இருக்கும்.
சீனாவிலிருந்து திரும்புவோருக்கான ‘வேலை விடுப்பு’ திட்டத்தின்படி, உணவு அல்லது வீட்டுப் பொருட்கள் வாங்க வெளியில் சென்று வரலாம். ஆனால் புதிய உத்தரவில் வெளியில் எங்கும் செல்லக்கூடாது.
வீட்டிலேயே தங்கி இருக்கும் உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வலியுறுத்தினார்.
கொரோனா கிருமி விவகாரத்துக்கான அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய திரு லாரன்ஸ் வோங், திரு கான் கிம் யோங் இருவரும் புதிய உத்தரவு பற்றி விவரித்தனர்.
முன்னைய வேலை விடுப்பு திட்டத்துக்குப் பதிலாக புதிய திட்டம் நடப்புக்கு வரும். இனி வேலை விடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்படாது.
“கணிசமான எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்ட காலம் தங்கும் அனுமதி பெற்றோர் ஆகியோர் இன்னமும் சீனாவில் உள்ளனர். அவர்கள் சிங்கப்பூருக்கு வர விரும்புகிறார்கள். அவர்களில் சிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கும் சாத்தியம் அதிகமுள்ளது,” என்று அமைச்சர் வோங் சொன்னார்.
வேலை அனுமதி அட்டை பெற்றி ருப்போருக்கும் வீட்டிலேயே தங்கி இருக்கும் உத்தரவு பொருந்தும். \
இதன்படி, அவர்களது தங்குமிடத்திலிருந்து அவர்கள் வெளியே செல்லக்கூடாது. உத்தரவு மீறப்பட்டால், முதலாளி அல்லது ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது.