கொவிட்-19 பரவல், அதனைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக வேலை பாதிப்பு ஏற்பட்ட சிங்கப்பூரர்களில் இன்னும் அதிகமனோர் தற்போது நிதி உதவிக்குத் தகுதிபெறுகின்றனர்.
கொவிட்-19 ஆதரவு மானியம் அதிக எண்ணிக்கையிலான சிங்கப்பூரர்கள், நிரந்தவாசிகளை உள்ளடக்கும் விதத்தில் விரிவுபடுத்தப்படுவதாக நேற்று (ஏப்ரல் 30) சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 சூழல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த மானியம் முதலில் உருவாக்கப்பட்டது.
தங்களது விருப்பமின்றி, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சம்பளமில்லா விடுப்பு எடுக்க வேண்டிய சூழலில் இருக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு தங்களது சம்பளத்தில் குறைந்தது 30 விழுக்காடு குறைவாகப் பெறுவோருக்கும் இந்த மானியம் ஆதரவு அளிக்கும் என அமைச்சு குறிப்பிட்டது.
வேலை அல்லது சம்பளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஜனவரி 23ஆம் தேதிக்குப் பிறகு நேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
“இந்த மாதத்துக்குப் பிறகு சிங்கப்பூரர்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும் என்று உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் இவ்வாண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கக்கூடிய கொவிட்-19 ஆதரவு மானியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டார்.
வேலை இழப்பு, சம்பளமில்லா விடுப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மானியத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு $800 வரை வழங்கப்படும்.
வேலை இழந்தவர்கள், சிங்கப்பூர் ஊழியரணி மற்றும் ‘எம்ப்ளாய்மென்ட் அண்ட் எம்ப்ளாயபிலிட்டி இன்ஸ்டிடியூட்’ ஆகியவற்றின் ஆதரவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி ஆதரவையும் பெறுவர். அதேபோல, சம்பளமில்லா விடுப்பில் இருப்போர், சிங்கப்பூர் ஸ்கில்ஸ்ஃபியூச்சரின் மானியத்துடனான பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அவர்கள் மானியத்துக்கு மே 4 முதல் விண்ணப்பிக்கலாம்.
சம்பளக் குறைப்பின் அடிப்படையில் இந்த மானியத்துக்கு தகுதி பெறுவோர் மூன்று மாதங்களுக்கு $500 வரை பெறுவர். சம்பளத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பைப் பொறுத்து இந்த உதவித்தொகை நிர்ணயிக்கப்படும்.
இத்தகைய ஊழியர்கள் மானியத்துக்காக மே 11 முதல் விண்ணப்பிக்கலாம்.
இணையம் வழியாக விண்ணப்பம் செய்வோர், அவர்களது வேலை நிலவாம், தற்போதைய சம்பளம், முந்தைய சம்பளம் போன்ற விவரங்களுக்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் தொடர்பிலான உதவிக்கு 1800-222-0000 என்ற காம்கேர் நேரடி தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்; அல்லது Ask_SSO@msf.gov.sg என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம்.
இணையம் வழியாக விண்ணப்பிக்க இயலாதோர் அருகில் உள்ள சமூக சேவை அலுவலகத்தின் உதவியை நாடலாம்.