சிங்கப்பூரின் பாதுகாப்பான, கனிவான இணைய சமூகம் அமைய மூன்று வழிகளைப் பரிந்துரைத்தார் பிரதமர் அலுவலக மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் (படம்). அவை முன்வருதல், முடுக்கி விடுதல், அடியெடுத்து வைத்தல் அணுகுமுறைகள்.
“பல பங்காளித்துவ அணுகுமுறைகளின் முக்கிய வழிநடத்துநர் என்ற முறையில் அரசாங்கம் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
“இன்றைய நிலையில் இணைய பாதுகாப்புக்கு எந்த ஒரு தனி அமைப்பும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. அது பல அமைப்புகளின் ஒட்டுமொத்த பொறுப்பாக அமைந்துவிட்டது.
“உதாரணத்துக்கு, கல்வி அமைச்சில் பாதுகாப்பான இணையப் பயன்பாடு, தொடர்பு தகவல் அமைச்சில் முதியவர்களுக்கு மின்னிலக்க கல்வியறிவு, இளையர்களுக்கு ஊடகக் கல்வியறிவு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சில் தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் மூலம் ஆலோசனை மற்றும் ஆதரவு, சமூக, கலாசார, இளையர்துறை அமைச்சில் இளையர் மனநல நல்வாழ்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
“இந்த பன்முறை அணுகுமுறைக்கு அரசாங்க அமைப்பின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த அமைப்பு எல்லா பங்காளித்துவ அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும்,” என்றும் திரு டான் கூறினார்.
இரண்டாவது அணுகுமுறையாக முடுக்கிவிடுதலைக் குறிப்பிட்ட அமைச்சர், “ஒவ்வொரு பங்காளித்துவ அமைப்பும் இணையப் பாதுகாப்பை முடுக்கிவிட வேண்டும்,” என்றார்.
“தனியார் துறையிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், பாதுகாப்பாகத் தொடங்குவதே பாதி போரை வென்று விட்டது போலாகும்.
“நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் வடிவமைப்பைப் பொறுத்து மின்னிலக்க சேவைகளை வழங்க வேண்டும். உதாரணத்துக்கு, வங்கிகள் தங்கள் முதிய வாடிக்கையாளர்களின் கணக்குகளில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான பரிவர்த்தனைகள் உள்ளனவா என்று கவனித்து வருகின்றன.
“வாடிக்கையாளர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்ய, நிறுவனங்களின் நிர்வாகமும் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் தங்கள் பிள்ளைகள் இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்வது பெற்றோரின் கடமையாகும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
மூன்றாவது அணுகுமுறையாக அடியெடுத்து வைத்தலைக் குறிப்பிட்ட திரு டான், “தேசிய அளவிலான இந்த முயற்சியில் அனைவரும் அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான, கனிவான சமூகத்தை உருவாக்க முடியும்.
“தேசிய பணிவன்பு இயக்கத்துக்கு ஆதரவளிக்க சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் 1997ல் தொடங்கப்பட்டது. அதுபோல, இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கலாம்,” என்றும் அமைச்சர் டான் யோசனை தெரிவித்தார்.