சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் 480க்கும் மேற்பட்ட பெண்களின் பாவாடைக்குள் படமெடுத்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்போது காவலில் வைக்கப்பட்டிருக்கும் சூ பென் வீ, 28, எனும் அம்மருத்துவர் காணொளி மூலமாக இன்று (டிசம்பர் 3) ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், சூ தமது காலணியில் ஒரு ‘கோபுரோ’ படக்கருவியை இணைத்து, 184 பெண்களின் பாவாடைக்குள் படமெடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அதேபோன்றதொரு முறையைக் கையாண்டு, மூன்று மாதங்களுக்குப் பின் முந்நூற்றுக்கும் அதிகமான பெண்களை அவர் குறிவைத்ததாகக் கூறப்பட்டது.
அவர் மொத்தம் 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
தமது குற்றங்களை சூ ஒப்புக்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இம்மாதம் 11ஆம் தேதி தமது குற்றங்களை அவர் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி எனும் விவரம் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
இன்று வரையிலும், அவரது பெயர் பதிவுசெய்யப்பட்ட சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் பட்டியலில் இருந்ததாகக் கூறப்பட்டது.
பெண்களின் மானத்திற்கு இழுக்கு விளைவித்த ஒவ்வொரு குற்றத்திற்கும் குற்றவாளிக்கு ஓராண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.