சிங்கப்பூரில் இவ்வாண்டு மரணமடைந்த 39 ஆடவர்கள், ஒன்பது மாதர்களின் அன்புக்குரியவர்களுக்கு அவர்கள் மரணம் அடைந்திருப்பது குறித்து தெரியாமல் இருக்கலாம், அல்லது அது குறித்து அக்கறைப்படாமல் இருக்கலாம்.
இவ்வாண்டு இதுவரை உயிரிழந்த 48 பேரின் உடல்களை அவர்களுக்கு நெருங்கியவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு போலிஸ் அதன் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். மருத்துவமனைகள், வீடு இல்லாதவர்களுக்கான நல்வாழ்வு இல்லங்கள், சொந்த வீடு ஆகிய இடங்களில் அவர்கள் மரணமடைந்தனர்.
இந்தச் சம்பவங்கள் சோகம் அளித்தாலும், சிங்கப்பூரில் மூத்தோர் தனிமையில் மரணம் அடைவதும் அவர்கள் மரணம் அடைந்து இருப்பது குறிப்பிட்ட காலத்திற்கு கண்டறியப்படாமல் போவதும் வழக்கத்திற்கு மாறானவை.
‘டச்’ மூத்தோர் நடவடிக்கை நிலையத்தின் வட்டாரத் தலைவரான திருமதி சேண்டி கோ, ஆண்டு ஒன்றுக்கு இதுபோன்ற ஓரிரு சம்பவங்களை மட்டும் தமது அமைப்பு கேள்விப்படுவதாகச் சொன்னார்.
‘லயன்ஸ் பிஃபிரண்டர்ஸ்’ நன்கொடை அமைப்பின் தலைவர் ஆன்டனி டே, தமது அமைப்பு செயல்பட்டு வரும் 25 ஆண்டு காலத்தில் விரலை விட்டு எண்ணும் இதுபோன்ற சம்பவங்களை மட்டுமே அறிந்திருப்பதாகக் கூறினார்.
தனிமையான சூழலில் முதியோர் மரணம் அடைந்து குறிப்பிட்ட காலத்திற்கு அது பற்றி மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் இந்த விவகாரம் குறித்து இவ்வாண்டு ஜனவரியில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கிடம் கேட்கப்பட்டு இருந்தது. அப்போது பதிலளித்த அவர், தமது அமைச்சு இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கையைக் கண்காணிப்பது இல்லை என்றார்.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், ஆண்டு ஒன்றுக்கு அன்புக்குரியவர்கள் பெற்றுக்கொள்ளாத 40 முதல் 75 வரையிலான உடல்களைத் தான் கையாளுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் பதிவாகும் ஏறத்தாழ 21,500 மரணங்களில் இந்த எண்ணிக்கை 0.5 விழுக்காடுகூட இல்லை.
உயிரிழந்தவரின் உடலைப் பெற்றுக்கொள்ள எவரும் முன்வராவிட்டால், இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தி அவரது உடலைப் பெற நெருங்கிய உறவினர் எவரும் இருக்கிறாரா என்பதைக் கண்டறிய சுகாதார அறிவியல் ஆணையம் போலிசிடம் இணைந்து பணியாற்றும்.
உடலைப் பெற்றுக்கொள்ள எவரும் இல்லை என்றால், அந்த உடலை மருத்துவ ஆய்வு போன்ற பணிகளுக்குப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படும் என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இல்லாவிட்டால், இறந்தவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து, அவரது உடலை தகனம் செய்யவோ நல்லடக்கம் செய்யவோ ஏற்பாடுகள் செய்யப்படும்.