‘எச்ஐவி’ பதிவகத்தின் தரவு கசிவு வழக்கில் கடந்த ஆண்டு அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மருத்துவர் லெர் டெக் சியாங், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் தமது சிறுநீர் மாதிரியைக் கொடுக்கத் தவறியதற்காக அவருக்கு கூடுதலாக பத்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விதிக்கப்பட்ட இந்தக் கூடுதல் தண்டனையுடன் லெர்ருக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகள் முடிவுக்கு வந்தன.
தேசிய பொதுச் சுகாதாரப் பிரிவின் முன்னாள் தலைவரான லெர், 2018ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி கொன்ராட் சென்டினியல் ஹோட்டலில் போதைப் புழங்கி ஒருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். அப்போது லெர்ரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதை உறுதி செய்ய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் சிறுநீர் மாதிரியைக் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் லெர் அதனைக் கொடுக்கவில்லை.
கட்டணம் வாங்கிக்கொண்டு போதைப் புழங்கிகளின் உடலில் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய லெர்ரின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவருக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தமது அமெரிக்க நண்பர் மிக்கி ஃபரேரா-புரோசெசுக்கு வேலை அனுமதி அட்டை கிடைக்க பொய்த் தகவல்கள் கூறியதற்காகவும் லெர்ருக்கு மேலும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் மருத்துவரான லெர்ரின் பெயர் மருத்துவர் பதிவேட்டிலிருந்து இவ்வாண்டு தொடக்கத்தில் அகற்றப்பட்டது.