மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறை குழுவின் தலைமைப் பதவியிலிருந்தும் சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் எனும் பொறுப்பிலிருந்தும் விலக, கடந்த ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள், குறிப்பாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் முடிவுகள் காரணமல்ல என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
அதிபர் மாளிகையில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமது வயதும், கொவிட்-19 நெருக்கடி விரைவில் முடிவுக்கு வராது என்பதுமே இதற்கு காரணம் என்பதை வலியுறுத்தினார்.
கடந்த 2011ல் அரசியலில் சேர்ந்ததிலிருந்து தெம்பனிஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அப்பகுதியின் குடியிருப்பாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டதாகக் கூறிய அவர், கட்சியை வலுப்படுத்த கடந்த ஆண்டு தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிக்குச் சென்றதாகச் சொன்னார்.
“அது எனக்கு முற்றிலும் புதிய களமாக இருந்தது, நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். நான் அத்தொகுதியில் நின்றதால், மசெகவுக்கு வாக்களிக்க மனம் மாறிவிட்டதாக சில குடியிருப்பாளர்கள் பிரசாரத்தின்போது என்னிடம் சொன்னார்கள்,” என்றார் அவர்.
இந்த ஆண்டு தமக்கு 60 வயதாகிறது என்பதைச் சுட்டிய திரு ஹெங், நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீளும் வரையில் பிரதமர் லீ தொடர்ந்து பிரதமராக இருப்பார் என்று குறிப்பிட்டார்.