இன்றைய சிங்கப்பூரர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்களைக் காட்டிலும் திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அதிகமான இளம் சிங்கப்பூரர்கள் ஒற்றையராக இருக்கும் வாழ்க்கைமுறையையே விரும்புகின்றனர்.
குடும்ப வாழ்க்கை தொடர்பான சிந்தனைப்போக்கு காலப்போக்கில் மாறிவிட்டதைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று (ஜூன் 16) வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை விளங்கியது.
திருமணம், மணமுறிவு, இறப்பு
திருமணமான சிங்கப்பூர்வாசிகளின் விகிதம் சற்று குறைந்துள்ளது. 2010ல் பதிவான 59.4 விழுக்காடு, 2020ஆம் ஆண்டில் 58.8 விழுக்காடானது.
தம்பதியிடையே மணமுறிவு ஏற்பட்டுள்ள விகிதம், 2010ல் இருந்த 3.3 விழுக்காட்டிலிருந்து சென்ற ஆண்டு 4.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.
வாழ்க்கைத் துணை இறந்துவிட்ட நிலையை ஒப்பிடும்போது, ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கையே தொடர்ந்து கூடுதலாக இருந்தது.
2020ல் கணவன்மார்களை இழந்த மாதரின் விகிதம் 8.4 விழுக்காடாக இருந்தது. மனைவியரை இழந்த கணவன்மார்களின் விகிதம் 1.9 விழுக்காடாக பதிவாகியது.
ஒற்றையர்கள் அதிகரிப்பு
அனைத்து வயதினரிலும் ஒற்றையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே ஆக அதிகமான அதிகரிப்பு காணப்பட்டது.
2010க்கும் 2020க்கும் இடையே 25 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஒற்றையராக உள்ள ஆண்களின் விகிதம் 74.6 விழுக்காட்டிலிருந்து 81.6 விழுக்காடாக அதிகரித்தது.
ஒற்றையராக இருந்த மாதர் எண்ணிக்கை 2010ல் பதிவான 54 விழுக்காட்டிலிருந்து 2020ல் 69 விழுக்காடானது.
அதிக பிள்ளைகள் வேண்டாம்
பத்தாண்டுக்கு முன்னர் இருந்த நிலையை ஒப்பிடுகையில் அதிகமான பிள்ளைகள் பெற்றெடுக்க விரும்பாத போக்கு பெண்களிடத்தில் காணப்பட்டது. 2010ல் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 2.02 குழந்தைகள் என்று பதிவாகியிருந்தது. ஆனால் 2020ல் இது 1.76 ஆகக் குறைந்தது.
காலம் தாழ்த்தித் திருமணம் செய்வது, நிதிச் சுமை, பிள்ளை வளர்ப்பின்போது கல்வியால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் போன்றவை காரணங்களாகக் கூறப்படுகிறது.
எல்லா இனத்தவரிடமும் வெவ்வேறு கல்வித் தகுதியுடையோரிடமும் இந்தப் போக்கு காணப்பட்டது.
இதன்படி 2020ல் ஓர் இந்தியப் பெண்ணுக்கு 1.86 குழந்தைகள், மலாய் பெண்ணுக்கு 2.43 குழந்தை, சீனப் பெண்ணுக்கு 1.65 குழந்தை எனப் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போக்கே பெரும்பாலான சிங்கப்பூர் பெண்களிடம் காணப்பட்டது.
பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில் 150,000 குடும்பங்கள் பங்கேற்றனர்.